பெண்களின் படங்களை பயன்படுத்தி பாரிய நிதிமோசடி - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கையில் பேஸ்புக் (Facebook) செயற்கை நுண்ணறிவு வலையமைப்பின் ஊடாக (AI) உருவாக்கப்பட்ட பெண்களின் போலி சுயவிபர புகைப்படங்களை பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் மோசடி தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பயனர்களை மோசடி மற்றும் ஆபாச உரையாடல்களில் சிக்க வைக்கும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.
போலி கணக்குகள்
உணர்ச்சிப்பூர்வமான மற்றும் பாலியல் ரீதியாகத் தூண்டக்கூடிய உள்ளடக்கங்களின் அடிப்படையில், பயனர்களை வயது வந்தோருக்கான அரட்டை சேவைகள், சூதாட்ட இணையதளங்கள், கிரிப்டோகரன்சி விளம்பரங்கள் மற்றும் பிற சந்தேகத்திற்குரிய இணையதளங்களுக்கு வழிநடத்த இந்த கணக்குகள் பயன்படுத்தப்படுகின்றன.

சிரேஷ்ட ஆய்வாளர் கலாநிதி சஞ்சன ஹத்தொட்டுவ நடத்திய ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
ஆய்வு செய்யப்பட்ட 10 பேஸ்புக் கணக்குகளில் ஒன்றுகூட உண்மையான பெண்களைக் குறிக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாறாக, அவை முற்றிலும் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட புகைப்படங்களையும் போலி அடையாளங்களையும் சார்ந்திருந்தன.
இந்த ஆய்வு, பெப்ரவரி 2025 மற்றும் ஜூன் 2026-க்கு இடையில் பதிவிடப்பட்ட 1,706 ஃபேஸ்புக் பதிவுகளை ஆய்வுக்கு உட்படுத்தியிருந்தது.
இந்த பதிவுகள் சமூக ஊடகங்களில் 890,000-க்கும் மேற்பட்ட பிரதிபலிப்புகளையும் பகிர்வுகளையும் பெற்றிருந்தன.
தனிப்பட்ட தகவல் பரிமாற்றங்கள்
பெரும்பாலும் சிங்களத்தில் உள்ள இந்த போலி சுயவிவரங்கள், திருமணமாகாத, விவாகரத்து பெற்ற, விதவையான அல்லது பொருளாதார ரீதியாக நலிவடைந்த மற்றும் ஒரு துணையை தேடும் பெண்களாக தங்களை காட்டிக்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தன.
அவர்கள், தங்கள் பதிவுளுக்கான கருத்துரையாளர்களைப் பொதுத்தளத்திலலிருந்து வாட்ஸ்அப் போன்ற தனிப்பட்ட தகவல் பரிமாற்றங்களுக்கு திசைதிருப்ப முயன்றுள்ளனர்.
குறைந்தது ஐந்து கணக்குகள் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் செயல்படுவதற்கான ஆதாரங்களும் கண்டறியப்பட்டுள்ளன. சில நிமிடங்களுக்குள் பல கணக்குகளில் ஒரே மாதிரியான தலைப்புகளின் 113 தொகுப்புகளும், 676 ஒரே மாதிரியான பதிவுகளும் பகிரப்பட்டிருந்தன.
இது, மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டில் உள்ள ஒரு வலையமைப்பைக் குறிக்கிறது. இந்தக் கணக்குகள், பேஸ்புக்கின் தணிக்கைக் கட்டுப்பாடுகளை தவிர்ப்பதற்காக, மிகவும் பகட்டான மற்றும் மிகைப்படுத்தப்பட்ட உடல் அம்சங்களைக் கொண்ட செயற்கைப் புகைப்படங்களைப் பயன்படுத்தியும், பாலியல் ஆர்வத்தை ஈர்த்துத் தூண்டுவதற்காகவும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
பயனர்களை மற்ற மோசடி வலைத்தளங்களுக்குத் திசைதிருப்புவதற்காக இந்தக் கணக்குகள் சுருக்கமான URL-சுட்டிகளைப் பயன்படுத்தியுள்ளன என்று கலாநிதி சஞ்சன ஹத்தொட்டுவ சுட்டிக்காட்டுகிறார்.
மேலும், பேஸ்புக்கிற்கு வெளியே உள்ள மற்ற தளங்களை அணுகும்போது, இந்தக் கணக்குகளுக்குப் பின்னால் உள்ளவர்கள் தங்கள் அடையாளங்களை மாற்றிக்கொள்கின்றனர்.
இதனால், பயனர்கள் தாங்கள் ஒரு உண்மையான நபருடன் பேசுகிறார்களா அல்லது ஒரு வணிக நிறுவனத்துடன் பேசுகிறார்களா என்பதை அடையாளம் காண்பது மிகவும் கடினமாகிறது.
அதிக ஆபத்து உள்ளதாக எச்சரிக்கை
இந்த செயல்பாடுகளுக்குப் பின்னால் எந்த அரசியல் செல்வாக்கும் இல்லை என்றாலும், இது ஏமாற்றுவதன் மூலம் வருமானம் ஈட்டும் ஒரே நோக்கத்துடன் செயல்படும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட வணிக நிறுவனம் என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

உண்மையான மனிதர்களை ஈடுபடுத்தாமலேயே, இதுபோன்ற செயற்கை நுண்ணறிவு அடையாளங்களால் சமூகத்தின் நம்பிக்கையைப் பெற முடியும் என்பதால், எதிர்காலத்தில் இந்த உள்கட்டமைப்பு நிதி மோசடி அல்லது பிற இணையவழி முறைகேடுகளுக்குப் பயன்படுத்தப்படுவதற்கான அதிக ஆபத்து இருப்பதாக அந்த ஆய்வாளர் எச்சரித்துள்ளார்.
இதுபோன்ற செயற்கை நுண்ணறிவு தொடர்பான உள்ளடக்கத்தையும், அதன் பின்னணியில் உள்ளவர்களையும் கண்டறிய, பேஸ்புக் போன்ற சமூக ஊடகத் தளங்களுக்கு வலுவான வெளிப்படைத்தன்மை, தகவல்களை வெளியிடுவதற்கான தேவைகள் மற்றும் வெளிப்புற இணைப்புகளைக் கடுமையாகக் கண்காணித்தல் ஆகியவை தேவை என்று அந்த அறிக்கை வலியுறுத்துகிறது.
அவசரமாக இடமாற்றப்படும் நீர்கொழும்பு சிறைச்சாலை பெண் கைதிகள்! அடுத்தடுத்து பதிவாகும் மரணங்கள் - தீவிரமடையும் விசாரணை
140 - 145 வேகத்தில் பந்துவீசக்கூடியவர் எங்களிடம் இல்லை: தோல்வி குறித்து இலங்கை கேப்டன் News Lankasri
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan