அவசரமாக இடமாற்றப்படும் நீர்கொழும்பு சிறைச்சாலை பெண் கைதிகள்! அடுத்தடுத்து பதிவாகும் மரணங்கள் - தீவிரமடையும் விசாரணை
நீர்கொழும்பு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண் கைதிகள் குழுவினர் ஏனைய சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
குறித்த கைதிகள் நேற்று (08) வாரியபோல மற்றும் போகம்பர சிறைகளுக்கு மாற்றப்பட்டதாக சிறைத்துறை தெரிவித்துள்ளது.
வெளிநாட்டுப்பெண் கைதிகள்
சம்பந்தப்பட்ட சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப்பெண் கைதிகளும் அவர்களில் அடங்குவதாக கூறப்படுகிறது.

நீர்கொழும்பு சிறையில் ஏற்பட்ட அமைதியின்மையின் காரணமாக, அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண் கைதிகள் குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இருப்பினும், போராட்டம் தற்போது முடிவுக்கு வந்துவிட்டதாகவும், கைதிகள் படிப்படியாக ஏனைய சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டு வருவதாகவும் சிறைச்சாலை ஊடகப்பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், நீர்கொழும்பு சிறையிலிருந்து ஆண் கைதிகளை ஏனைய சிறைகளுக்கு மாற்றும் பணியும் நடைபெற்று வருகின்றது.
சிறைகளில் உள்ள வசதிகளை ஆய்வு செய்த பின்னரே இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்படுவதாகவும் சிறைத்துறை தெரிவித்துள்ளது.
நீர்கொழும்பு சிறையில் சுமார் 1,000 கைதிகள் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைதிகள் மரணம் குறித்து விசாரணை
இதற்கிடையில், அங்குனுகொலபெலஸ்ஸ, பூசை மற்றும் வெலிக்கடை சிறைகளில் மூன்று கைதிகள் உயிரிழந்தமை குறித்து பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
சம்பந்தப்பட்ட சிறைகளுக்குச் சொந்தமான பொலிஸ் நிலையங்களால் விசாரணைகள் தொடங்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சமீபத்தில் நீர்கொழும்பு சிறைகளிலிருந்து அங்குனுகொலபெலஸ்ஸ மற்றும் பூசா சிறைகளுக்கு மாற்றப்பட்ட இரண்டு கைதிகள், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தனர்.
மேலும், வெலிக்கடை சிறையில் ஒரு கைதி தற்கொலை செய்துகொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மரணங்கள் குறித்து பொலிஸ் நிலையங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக விசாரணைகள் தொடங்கப்படும் என்றும் பொலிஸ் தெரிவித்துள்ளது.
கருப்பு பட மாபெரும் வெற்றி, அடுத்த பட சம்பளத்தை உயர்த்தினாரா நடிகர் சூர்யா?... அதுவும் இத்தனை கோடியா? Cineulagam