அரிசியை கடன் வாங்கும் அளவுக்கு விவசாய காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு
திருகோணமலை-முத்து நகர் விவசாய காணியை இந்தியாவின் சூரிய மின்சக்தி உற்பத்திக்காக குத்தகைக்கு வழங்கியுள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளோம் என கிழக்கு மாகாண நில மீட்புக்கான வலையமைப்பின் செயற்பாட்டாளர் சஹீலா சபருள்ளா தெரிவித்தார்.
காணி வாரத்தினை முன்னிட்டு திருகோணமலையில் உள்ள தனியார் விடுதியில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் 53 வருடங்களாக வேளாண்மை செய்கையை நம்பி வாழ்ந்து வந்தோம். ஜீவனோபாயம் தற்போது பாதிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளோம். இதனால் 352 விவசாய குடும்பங்கள் பாதிப்புக்கு உள்ளானோம்.
நில இழப்பீடு
70 நாட்களாக தொடர் சத்தியாக் கிரக போராட்டத்தில் ஈடுபட்ட போது திட்வா புயல் காரணமாக இடை நடுவில் துரதிஷ்டவசமாக கைவிடப்பட்டது. இதனால் மேலும் பாதிக்கப்பட்டுள்ளோம்.

அரிசியை பிச்சை எடுக்கும் அளவுக்கு தள்ளப்பட்டுள்ளோம். தற்போது நில மீட்புக்கான வலையமைப்புடன் இணைந்து செயற்படுகிறோம்.
எனவே பாதிக்கப்பட்ட எங்களுக்கு நில இழப்பீட்டுக்கான மாற்று காணியை தாருங்கள் எனவும் கோரிக்கையை உரிய அரச தரப்பிடம் முன்வைப்பதாகவும் கூறினார்.