உயர்நீதிமன்ற நீதிபதிகளின் வயது நீடிப்பு நிச்சயம்! ஜனாதிபதி உறுதி
பிரதம நீதியரசர் உள்ளிட்ட உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது நிச்சயமாக நீட்டிக்கப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
நீதித்துறை அதிகாரிகள் சங்கம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் சங்கத்துடனான உத்தியோகபூர்வ சந்திப்பொன்று நேற்று (01) மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
ஜனாதிபதி உறுதி
குறித்த கலந்துரையாடல் தொடங்குவதற்கு முன்பே ஜனாதிபதி இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
அப்போது நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவும், நீதி அமைச்சு செயலாளர் ஆயிஷா ஜினசேனவும் அந்த சந்திப்பில் கலந்துகொள்ள வருகை தந்திருக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதியின் இந்த யோசனைக்கு நீதித்துறை அதிகாரிகள் சங்கம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் சங்கத்தின் அதிகாரிகள் எந்தவொரு குறிப்பிட்ட பதிலையும் அளிக்கவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
பாலியல் துர்நடத்தை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முஸ்லிம் மதகுரு..! பொலிசாரின் அறிக்கைக்கு மறுப்பு
கடும் விமர்சனங்கள்
ஜனாதிபதியின் முன்மொழிவு வெளிப்பார்வைக்கு அனைத்து நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பதற்கான ஒரு முன்மொழிவாக 'நல்ல விதமாக' முன்வைக்கப்படவிருந்தாலும், அதன் அடிப்படை நோக்கம், தற்போதைய பிரதம நீதியரசரை மேலும் இரண்டு ஆண்டுகளுக்குப் பதவியில் வைத்திருக்க வேண்டும் என்ற ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் அபிலாசையே என்று தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய பிரதம நீதியரசருக்கு இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு பதவி நீடிப்பு வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி உத்தேசித்துள்ள நிலையில் அது தொடர்பில் நீதித்துறையில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தற்போதைய பிரதம நீதியரசர் ப்ரீதி பத்மன் சூரசேன எதிர்வரும் டிசம்பர் மாதத்துடன் தனது பதவியில் இருந்து ஓய்வுபெறவுள்ளார்.
தமக்கு விருப்பமான நீதிபதிகளைத் தாம் விரும்பும் வரை பதவியில் வைத்திருக்க ஜனாதிபதியும் அரசாங்கமும் மேற்கொள்ளும் முயற்சிகள், சட்ட மற்றும் நீதித்துறைத் துறைகளில் கடும் விமர்சனங்களையும் எதிர்ப்பையும் சந்தித்துள்ளன.
நீதித்துறையின் சுதந்திரம்
இது நீதித்துறையின் சுதந்திரம் தொடர்பான ஒரு தவறான முன்னுதாரணம் என்று சட்ட மற்றும் நீதித்துறை வல்லுநர்கள் கருதுகின்றனர்.
அரசியலமைப்பின்படி, ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதியின் ஓய்வு பெறும் வயது 65 ஆகவும், ஒரு மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியின் ஓய்வு பெறும் வயது 63 ஆகவும் உள்ளது.

ஏனைய நீதிமன்ற நீதிபதிகள் 60 வயதில் ஓய்வுபெறவேண்டும். இந்நிலையில் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது தொடர்பான முன்மொழிவொன்றை முன்வைக்க ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தேசித்துள்ளார்.
இந்த வரம்பை நீட்டிப்பதாயின் அதற்காக ஒரு அரசியலமைப்புத் திருத்தம் தேவைப்படும். ஆனாலும் அவ்வாறு ஒரு அரசியலமைப்புத் திருத்தம் முன்மொழியப்பட்டாலும் அதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட நீதித்துறை மற்றும் சட்டவல்லுனர்கள் தரப்பு தீர்மானித்துள்ளது.