சாரதிகளின் கவனத்திற்கு..! சிசிடிவி அபராதம் என்ற பெயரில் புதிய மோசடி..
போக்குவரத்து விதிமீறல்களுக்காக சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு அபராதம் வசூலிப்பதாகக் கூறி, சாரதிகளை இலக்காகக் கொண்ட நிதி மோசடி ஒன்று இடம்பெற்று வருவதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சகம் எச்சரித்துள்ளது.
மோசடிக்காரர்கள், பயனர்கள் செய்ததாகக் கூறப்படும் போக்குவரத்து விதிமீறல்கள் சிசிடிவியில் பதிவாகியுள்ளதாக தெரிவித்து, வெளிநாட்டு தொலைபேசி எண்களிலிருந்து குறுஞ்செய்திகள் மற்றும் வட்ஸ்அப் மூலம் போலிச் செய்திகளை அனுப்பி வருகின்றனர்.
நிதி மோசடி
அந்தச் செய்திகளில், அபராதத்தைச் செலுத்துமாறு கோரி ஒரு இணைய இணைப்பும் வழங்கப்படுகிறது.
குறித்த இணையதளம், அரசின் அதிகாரப்பூர்வ Gov Pay சேவையைப் போலவே வடிவமைக்கப்பட்டிருப்பதுடன், வாகனப் பதிவு எண்ணை உள்ளிட்ட பின்னர் போலியான போக்குவரத்து விதிமீறல் அறிக்கையையும் காட்டுவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அபராதம் செலுத்தும் பெயரில், பயனர்களிடம் கடன் அல்லது பற்று அட்டை விவரங்கள் கேட்கப்பட்டு, பின்னர் அவர்களது வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை மோசடியாகப் பெறுவதே இதன் நோக்கமாகும்.
இதனையடுத்து, குறுஞ்செய்திகள் மற்றும் வட்ஸ்அப் மூலம் கிடைக்கும் சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை ஒருபோதும் திறக்க வேண்டாம் என்றும், தனிப்பட்ட தகவல்கள் அல்லது வங்கி தொடர்பான விவரங்களை எந்தவொரு அறியப்படாத இணையதளத்திலும் வழங்க வேண்டாம் என்றும் பொதுமக்களிடம் அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
மக்களின் கவனத்திற்கு
அரசுப் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் போது, .gov.lk என்ற டொமைன் பின்னொட்டைக் கொண்ட அதிகாரப்பூர்வ அரசாங்க இணையதளங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இலங்கையில் போக்குவரத்து அபராதங்கள் அல்லது அறிவிப்புகள் வெளிநாட்டு தொலைபேசி எண்களிலிருந்து அனுப்பப்படுவதில்லை என்பதால், அத்தகைய தகவல்களை உடனடியாக புறக்கணிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, வங்கி அட்டையின் PIN எண், OTP குறியீடு அல்லது CVV எண் போன்ற இரகசிய தகவல்களை எவரிடமும் பகிர வேண்டாம் என்றும், அரசாங்க நிறுவனங்கள் இத்தகைய தகவல்களை தொலைபேசி அல்லது செய்தி மூலம் ஒருபோதும் கோருவதில்லை என்றும் அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.