காபூல் விமான நிலையத்தில் தீவிரமடைந்த அசாதாரண நிலை - பரஸ்பர துப்பாக்கிச்சூடு: ஆப்கானிஸ்தான் வீரர் பலி
ஆப்கானிஸ்தானிலுள்ள காபூல் விமான நிலையத்தில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட பரஸ்பர துப்பாக்கிச்சூட்டு சம்பவம் காரணமாக அங்கு அசாதாரண நிலை தீவிரமடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இன்று காலை திடீரென விமான நிலையத்தின் வடக்கு வாசல் பகுதியிலிருந்து அடையாளம் தெரியாத நபர்கள் ஆப்கானிஸ்தான் வீரர்கள் மீது துப்பாக்கிச்சூட்டினை மேற்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து ஆப்கானிஸ்தான் வீரர்களும் பதில் துப்பாக்கிச்சூட்டினை மேற்கொண்டிருந்த போதும் ஆப்கானிஸ்தான் வீரர் ஒருவர் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதும், விமான நிலையத்தில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு வரும் அமெரிக்க மற்றும் ஜெர்மனி வீரர்களும் கூட்டாக இணைந்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளன நிலையில் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் நோக்கில் காபூல் சர்வதேச விமான நிலையத்தில் பெருமளவானோர் திரண்டுள்ளனர்.
அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் தத்தமது நாட்டினரை அழைத்துச் செல்வதுடன், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்களையும் அங்கிருந்து மீட்டு வருகிறது.
இந்த நிலையில் விமான நிலையித்தில் அமெரிக்க, நேட்டோ படைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் அதேவேளை ஆப்கானிஸ்தான் படைகளும் பாதுகாப்பு கடமைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
