போராட்டத்தில் குதித்த பள்ளிமுனை கிராம கடற்தொழிலாளர்கள் (Photos)
கடற்தொழிலில் ஈடுபடும் தமக்கு தொழில் ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வரும் பாஸ் நடைமுறை மற்றும் மன்னார் கடற்றொழில் திணைக்களத்தின் செயற்பாடு போன்ற விடயங்களை கண்டித்து மன்னார் - பள்ளிமுனை கிராம கடற்தொழிலாளர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த போராட்டம் இன்று (12.10.2023) காலை 11.45 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இடையூறு ஏற்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு
பள்ளிமுனை கடற்கரையில் இருந்து அட்டை பிடிக்க கடலுக்குச் செல்லும் பள்ளிமுனை கிராம கடற்தொழிலாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதோடு, மன்னார் கடற்றொழில் திணைக்களத்தின் கோரிக்கைக்கு அமைவாக கடற்படையினர் இடையூறை ஏற்படுத்துவதாகவும் கடற்தொழிலாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று (12) காலை பள்ளிமுனை கடற்கரையில் இருந்து கடலட்டை பிடிக்க தொழிலுக்குச் செல்ல முயன்ற போது தொழிலாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
படகு ஒன்றில் 3 பேர் மாத்திரமே செல்ல முடியும் என கடற்படை அறிவித்தமையினால் கடற்தொழிலாளர்கள் தொழிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளின் பணிப்புரை
மேலும் கடல் தொழிலுக்குச் செல்லும் போது கடற்படையினர் எங்களுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குகின்ற போதும், மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் தமக்கு பாரிய இடையூறை ஏற்படுத்துவதாகவும், கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளின் பணிப்புரைக்கு அமையவே கடற்படையினர் கெடுபிடிகளை மேற்கொள்வதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட கடற்தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

இதன்போது கடற்தொழிலாளர்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு மாவட்டச் செயலகம் வரை வருகை தந்து மாவட்டச் செயலக பிரதான நுழைவாயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.







லட்சுமி பிரியா முதல் பிளாக் பாண்டி வரை.. பிக் பாஸ் 10ல் நுழைந்த போட்டியாளர்கள் முழு லிஸ்ட் Cineulagam