11 தமிழ் இளைஞர்கள் கடத்தல் விவகாரம்: முன்னாள் கடற்படை தளபதி மீண்டும் சந்தேகநபராக பெயரிடப்பட்டார்
2008ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில், முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன மீண்டும் ஒருமுறை சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளார்.
இதன்படி, எதிர்வரும் ஜூலை மாதம் 27ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு தெரிவித்து, சந்தேகநபரான முன்னாள் கடற்படை தளபதிக்கு அழைப்பாணை அனுப்புமாறு கொழும்பு கோட்டை நீதவான் பசான் அமரசேன உத்தரவிட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன இதற்கு முன்னரும் சந்தேகநபராக பெயரிடப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

எனினும், 2024 ஜனவரி 03ஆம் திகதி அப்போதைய சட்டமா அதிபராக இருந்த சஞ்சய் ராஜரத்தினத்தின் அறிவுறுத்தலின் பேரில் இந்த சந்தேகநபர் விடுவிக்கப்பட்டார்.
எனினும், பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் முன்னிலையான சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன நீதிமன்றத்தில் முன்வைத்த கோரிக்கை மற்றும் சமர்ப்பிப்புகளை பரிசீலித்ததன் பின்னர், அவரை மீண்டும் சந்தேகநபராக பெயரிட குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, கடந்த ஏப்ரல் 29ஆம் திகதி கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமாரவும் இவரை சந்தேகநபராக பெயரிடுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டிருந்தார்.
2008ஆம் ஆண்டில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை மற்றும் அவர்களைத் தடுத்து வைத்து கப்பம் பெற முயன்றமை போன்ற சம்பவங்கள் தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில், பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் கடற்படை லெப்டினன்ட் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி எனப்படும் 'நேவி சம்பத்' என்பவருக்கு தலைமறைவாக இருப்பதற்கும் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்கும் ஆதரவளித்த குற்றச்சாட்டின் கீழேயே முன்னாள் கடற்படை தளபதிக்கு எதிராக இந்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
2015 முதல் 2017 வரை கடற்படை தளபதியாக பதவி வகித்த ரவீந்திர விஜேகுணரத்ன, 2017 முதல் 2020 வரை முப்படைகளின் பாதுகாப்புப் பணியாளர்களின் பிரதானியாகவும் கடமையாற்றியிருந்தார்.
இந்த வழக்கில் ஏனைய சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ள, 'நேவி சம்பத்' மறைந்திருந்த பொல்வத்தை பகுதியை பொறுப்பாக கவனித்த லக்சிரி அமரசிங்க மற்றும் முன்னாள் கடற்படை லெப்டினன்ட் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி ஆகியோர் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதோடு, வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.
கப்பம் பெறுவதற்காக இளைஞர்களைக் கடத்திய சம்பவத்தில் தொடர்புடைய பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒருவருக்கு தஞ்சம் அளித்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால், இந்த மூன்று சந்தேகநபர்களுக்கும் எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
பல வருடங்களாக இழுபறியிலுள்ள இந்த சர்ச்சைக்கரிய வழக்கின் மேலதிக விசாரணைகள் எதிர்வரும் ஜூலை 27ஆம் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் நடைபெறவுள்ளது.
ப்ளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ள கருப்பு திரைப்படம்.. இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா Cineulagam