நிதி மோசடி தொடர்பில் இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: வீ. இராதாகிருஷ்ணன் (photo)
பதுளையில் மலையக மக்கள் முன்னணிக்குரிய சந்தா பணத்தை சூறையாடி, நிதி மோசடியில் ஈடுபட முயற்சித்துள்ள இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமாருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மலையக மக்கள் முன்னணி மற்றும் மலையக தொழிலாளர் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மலையக மக்கள் முன்னணி மற்றும் மலையக தொழிலாளர் முன்னணி ஆகியவற்றின் நிர்வாக சபை கூட்டம் தலவாக்கலையில் நேற்று (05.02.2023) நடைபெற்றுள்ளது.
இக்கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில், " மலையக மக்கள் முன்னணியின் விசேட நிர்வாக சபைக்கூட்டம், மலையக தொழிலாளர் முன்னணியின் சார்பில் நடைபெற்றது.
நிதி மோசடி
இதன்போது பதுளை மாவட்டத்தில் எமது சங்கத்துக்குரிய சந்தாவை அபகரிப்பதற்கு முற்பட்டுள்ள விவகாரம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
பதுளை மாவட்டத்தில் ஐக்கிய தொழிலாளர் முன்னணி என்ற ஸ்தாபகத்தை சேர்ந்தவர்கள், மலையக மக்கள் முன்னணிக்குரிய சந்தாவை ஐக்கிய தொழிலாளர் முன்னணிக்கு அனுப்பிவைக்குமாறு கடிதம் அனுப்பியுள்ளனர்.
மேற்படி ஸ்தாபகத்தின் தொழில் உறவு அதிகாரி எனக் கூறப்படும் நமச்சிவாயம் என்பவராலேயே இக்கடிதம் அனுப்பட்டுள்ளது.
மலையக மக்கள்
மலையக மக்கள் முன்னணியிலிருந்து பிரிந்து சென்ற அரவிந்தகுமாரே ஐக்கிய தொழிலாளர் முன்னணியை உருவாக்கியுள்ளார்.
இந்நிலையில் எமது சங்கத்துக்குரிய சந்தாவை கபடத்தனமாக சூறையாடுவதற்காக கடிதங்களை எழுதியுள்ளார். இது பாரதூரமான விடயமாகும்.நிதி மோசடியும்கூட.
எனவே, அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.ஏனைய பகுதிகளிலும் இவ்வாறு நடந்துள்ளதா என்பது பற்றி ஆராயப்பட்டுவருகின்றது.
அதேவேளை, தேர்தலை நடத்துவதற்கு நிதி இல்லை எனக்கூறும் அரசாங்கம், சுதந்திர தினத்தை பெருமெடுப்பில் கொண்டாடியுள்ளது. தெற்கில் சுதந்திர தினம் இடம்பெற்றாலும் வடக்கு, கிழக்கில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.
வழமைபோல இம்முறை சுதந்திர தின நிகழ்வுகள் நாட்டில் இடம்பெறவில்லை. மக்களுக்கு உண்ண வழி இல்லை. மருந்துகள் இல்லை.
சுதந்திர தின கொண்டாட்டம்
இதற்கு எதிர்ப்பை வெளியிடும் வகையிலேயே மக்கள் இப்படி செயற்பட்டனர் என்பதை உணர முடிகின்றது.
சுதந்திரம் என்பது எல்லோருக்கும் கிடைக்ககூடியதாக இருக்க வேண்டும். ஒரு சில சமூகத்தை ஒதுக்கிவைத்துவிட்டு சுதந்திரத்தை கொண்டாடுவது அர்த்தமற்ற செயலாகும் என தெரிவித்துள்ளார்.
முன்னணியின் தலைவர் வே. இராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முன்னணியின் செயலாளர் எஸ். விஜேசந்திரன், மலையக தொழிலாளர் முன்னணியின் செயலாளர் சுப்பிரமணியம், நிதிச் செயலாளர் விஸ்வநாதன் புஸ்பா உட்பட கட்சி, தொழிற்சங்க முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)