வீடமைப்பு திட்டம் தொடர்பில் ஆராயப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் டக்ளஸ்
வீடமைப்பு திட்டம் என்பதும் அதற்கான நிதி ஒதுக்கீடும் நாடளாவிய ரீதியில் உள்ள பிரச்சினையாக உள்ளதால் அது தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெவித்துள்ளார்.
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்றையதினம் (28.12.2023) டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றிருந்தது.
இதில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் வீட்டுத்திட்ட பயனாளர் தொடர்பில் ஆராயப்பட்ட போதே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
வீட்டுத் திட்டங்களின் முன்னேற்ற நகர்வுகள்
தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வீட்டுத் திட்டங்களின் முன்னேற்ற நகர்வுகள் தொடரில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு ஆராயப்பட்டன.
இந்த நிலையில் 5 மில்லியனுக்கே வீடு கட்ட முடியாதென குறை கூறிக்கொண்டிருக்கும் மாவட்டமாக யாழ்ப்பாணம் இருக்கின்றது என வட மாகாண ஆளுநர் குற்றம் சாட்டியுள்ளார்.
குறிப்பாக ஒரு மில்லியன் திட்டத்துக்கு 403 பயனாளரும், 6 இலட்சம் திட்டத்திற்கு 101 பயனாளரும் கோரியுள்ளதாக துறைசார் அதிகாரிகளால் சுட்டிக்காட்டப்பட்டது.
இதில் ஆறு இலட்சம் திட்டம் என்பது தற்போதைய சூழ்நிலையில் சாத்தியமானதென்று அல்ல. இதனை குறைந்தது பதினைந்து இலட்சமாக உயர்த்தவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டதுடன் அதுவரை குறித்த இரு திட்டங்களுக்கும் அனுமதி வழங்க கூடாதெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மின்கலம் பொருத்திய வீட்டு திட்டம்
இதேநேரம் எந்தவொரு திட்டமும் பயனாளரின் விருப்பின்றி வழங்கப்படாது என சுட்டிக்காட்டிய ஆளுநர், “மற்றொரு திட்டமான 25000 சூரிய மின்கலம் பொருத்திய வீட்டு திட்டத்திற்கு பயனாளிகள் பட்டியல் கிடைக்கவில்லை என்றும், அதன் பின்னர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்துக்கு கொண்டு சென்று அவர் பிரதேச செயலகர்களுடன் அது தொடர்பில் கலந்துரையாடி தெளிவுறுத்திய பின்னர் அதற்கான பயனாளர்கள் தெரிவு நடைபெற்று வருவதாகவும்” சுட்டிக்காட்டியிருந்தார்.
இதேவேளை யாழ்ப்பாணத்தில் சுமார் 16 ஆயிரம் பேர் வீடு அற்றவர்களாக இருக்கின்ற நிலையில் இதில் 10 ஆயிரம் வீட்டு திட்டத்தை யாழ்ப்பாணத்துக்கு கொடுத்துள்ளதாகவும் அதற்காக இதுவரை 8957 பேரது பெயர்கள் தற்போது கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனாலும் இந்த வீட்டு திட்டம் யாழில் சாத்தியம் இல்லை என்று மக்களை குழப்பும் நிலை காணப்படுகின்றது. சுமார் 1000 சதுர அடி கொண்ட குறித்த வீட்டுத் திட்டத்தில் கூரை சூரிய மின்கலம் பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் சுடிக்காட்டப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




