25 ஆண்டுகளாக பயிர் செய்கையில் ஈடுபட்டவர்களுக்கு முதலில் காணி! காதர் மஸ்தான் பணிப்பு
மன்னார் - மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இலுப்பைக்கடவை சோழ மண்டலக் குளம் பகுதியில் கடந்த 25 ஆண்டுகளாகப் பயிர் செய்கையில் ஈடுபட்டவர்களுக்கு முதலில் காணியை வழங்கிய பின்னரே ஏனைய விடயத்தை முன்னெடுக்க வேண்டும் என மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தான் உரிய அதிகாரிகளுக்கு இன்று பணிப்புரை விடுத்துள்ளார்.
மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இலுப்பைக்கடவை சோழ மண்டலக்குளம் பகுதியில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் 250 ஏக்கர் காணி காணப்படுகின்றது.
இக்காணியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக இலுப்பைக்கடவை அந்தோனியார் புரம் பகுதியில் உள்ள 95 பேர் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனினும் அவர்களுக்குக் குறித்த காணி உரிய முறையில் வழங்கப்படாமை குறித்து மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் அண்மையில் காணி அமைச்சரிடம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கோரி அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தார்.
இந்த நிலையில் குறித்த கோரிக்கைக்கு அமைவாக இன்று காலை மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தான் தலைமையில் வட மாகாண காணி சீர் திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நிமலன், மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் கே.அரவிந்தராஜ் மற்றும் மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் உட்பட உரிய அதிகாரிகள் இலுப்பைக்கடவை சோழ மண்டலக்குளம் பகுதியில் உள்ள குறித்த பகுதிக்குச் சென்று பார்வையிட்டதோடு விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதன் போது அங்கு இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு அமைவாக 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் ஆவணத்தைப் பெற்றுக் கொண்டவர்கள், தனி நபர்கள் மற்றும் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் குறித்த பகுதியில் காணி துப்பரவு செய்திருந்த நிலையில் அவர்களின் துப்புரவு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
மேலும் கடந்த 25 ஆண்டுகளாகப் பயிர் செய்கையில் ஈடுபட்டவர்களுக்கு முதலில் காணியை வழங்கிய பின்னரே ஏனைய விடையத்தை முன்னெடுக்க வேண்டும் என மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் உரிய அதிகாரிகளுக்குக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
அதற்கு அமைவாகத் துப்பரவு செய்தவர்களின் பணிகள் நிறுத்தப்பட்டு 25 ஆண்டுகளாகப் பயிர் செய்கையில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு காணி வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலதிகமான நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளரிடம் அபிவிருத்திக் குழுவின் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.