ஜனாதிபதி கோட்டபாயவின் அதிரடி நடவடிக்கை - கலக்கத்தில் உயர்மட்ட அதிகாரிகள்
இலங்கையில் செயற்படும் அரச நிறுவனங்களின் தலைவர்களை பதவியில் இருந்து நீக்கிவிட்டு புதியவர்களை நியமிக்கவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை, புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம், இலங்கை தர நிர்ணய நிறுவனம் மற்றும் முக்கிய அரச ஊடக நிறுவனம் ஆகியன உட்பட 30 நிறுவனங்களின் தலைவர்கள் நீக்கப்படவுள்ளனர். இதன்காரணமாக பல நிறுவனங்களின் தலைவர்கள் கலக்கத்தில் உள்ளதாக தெரிய வருகிறது.
இதேவேளை, மேல் மாகாண பிரதம செயலாளராக நியமிக்கப்பட்ட திருமதி ஜே.எம்.சி.ஜயந்தி விஜேதுங்கவை அப்பதவியிலிருந்து நீக்கி, சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவராக நியமிக்க அரசாங்கம் திட்டமிட்டிருந்தது. ஆனால் விஜேதுங்கவின் இடமாற்றம் குறித்து பொது நிர்வாக அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதியிடம் விளக்கமளித்ததால் இடமாற்றம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.
அவுஸ்திரேலியாவுக்கான உயர்ஸ்தானிகர் பதவிக்கு கலாநிதி ஜகத் வெள்ளவத்தை ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார். எனினும் அவுஸ்திரேலியா அதனை இடைநிறுத்தியுள்ளதால் இத்தாலிக்கான இலங்கைத் தூதுவராக கலாநிதி வெள்ளவத்தையை நியமிக்க தீர்மானித்துள்ளதாக தெரிய வருகிறது.