பெரியகல்லாறு பகுதியில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் கோவிட் தொற்றாளர்களின் தொகை அதிகரித்து வருவதாகச் சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
பெரியகல்லாறு பகுதியின் 02ஆம், 03ஆம் கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியிலிருந்து பெருமளவான கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுவருவதாகப் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
"பெரியகல்லாறு 03ஆம் கிராம சேவையாளர் பிரிவில் இரண்டு இடங்களில் இடம்பெற்ற மரண வீட்டுக்குச் சென்று வந்தவர்களே அதிகளவில் கோவிட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினமும் குறித்த பகுதியில் 113 பேருக்கு அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், அதில் 14 பேர் கோவிட் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து அப்பகுதியில் மக்கள் அன்டிஜன் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இதுவரையில் குறித்த பகுதிகளில் 94 கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும்
அப்பகுதியைச் சேர்ந்தவர்களும் அவர்களுடன் தொடர்புபட்டவர்களும் தொடர்ந்து
தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத் துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.