வீதி விபத்துக்களால் கடந்த ஏழு நாட்களில் 69 பேர் பலி - பொலிஸார் விடுத்த எச்சரிக்கை
இலங்கை முழுவதும் கடந்த 7 நாட்களில் இடம்பெற்ற வீதி விபத்துக்கள் காரணமாக 69 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் 13 காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணிவரையான காலப்பகுதியில் பதிவான விபத்துக்கள் காரணமாகவே இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இலங்கையில் நாளாந்தம் இடம்பெறும் வீதி விபத்துக்கள் காரணமாகச் சராசரியாக 6 அல்லது 7 பேர் உயிரிழப்பதாகப் பதிவாகியிருந்த நிலையில் கடந்த பண்டிகைக் காலத்தில் இந்த எண்ணிக்கை 9 முதல் 10 ஆக உயர்வடைந்துள்ளது.
கடந்த 14 மற்றும் 15ஆம் திகதிகளில் மாத்திரம் 30 பேர் விபத்துக்களால் இலங்கையில் உயிரிழந்திருந்ததோடு, சுமார் 80 பேர் காயமடைந்திருந்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் 8 பேர் கடந்த 15ஆம் திகதி விபத்துக்கு உள்ளானவர்கள் என்பதோடு, கடந்த 14ஆம் திகதி இடம்பெற்ற விபத்துக்களில் மாத்திரம் சுமார் 22 பேர் உயிரிழந்திருந்தனர்.
ஒட்டுமொத்தமாகக் கடந்த 14 மற்றும் 15ஆம் திகதிகளில் வீதி விபத்துக்களில் 30 பேர் உயிரிழந்துள்ளதுடன், 150ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இது இவ்வாறு தொடருமானால் வருடாந்தம் 3,650 பேர் வீதி விபத்துக்கள் காரணமாக உயிரிழக்கும் நிலை ஏற்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.
ஆகவே, வாகன சாரதிகள் மற்றும் பாதசாரிகள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு காவல்துறை ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன வலியுறுத்தியுள்ளார்.
இந்த வருடம் இதுவரை மொத்தம் 3,556 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை ஏப்ரல் 18 பிற்பகல் 12 மணிமுதல் நேற்று காலை 6 மணிவரையான 18 மணிநேரக் காலப் பகுதியில் காவல்துறை மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 905 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 6,898 மோட்டார் வாகன வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக
காவல்துறை தெரிவித்துள்ளது.
இவற்றுள் அதிகமான வழக்குகள் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டியுடன்
தொடர்புடையவை என்பது குறிப்பிடத்தக்கது.