நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் பேருந்து மோதி விபத்து - 28 வயது இளைஞருக்கு நேர்ந்த கதி
பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் தனியார் பேருந்து மோதியதில், லொறியில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று(20.05.2026) இடம்பெற்றுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (20) புதன்கிழமை காலை சுமார் 10 மணியளவில், ஆழ்துளைக் கிணறுகளைச் சரிசெய்யும் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்தது.
பேருந்து மோதியதில் ஒருவர் பலி
அப்போது அந்த லொறியில் வந்திருந்த தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர் லொறியிலிருந்து இறங்கி அதன் அருகே நின்று கொண்டிருந்த போது, பொகவந்தலாவயில் இருந்து ஹட்டன் நோக்கி செல்லத் தயாராக இருந்த தனியார் பேருந்து இயக்க நிலையில் சாரதி இல்லாமல் தானாகவே முன்னோக்கிச் சென்று முன்பாக நிறுத்தப்பட்டிருந்த லொறியின் மீது மோதியுள்ளது.

இதன்போது லொறிக்கு அருகே நின்று கொண்டிருந்த தொழில்நுட்ப வல்லுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் பொகவந்தலாவையைச் சேர்ந்த 28 வயது இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேகத்தின் பேரில் விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டதாகவும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
