படைக்குறைப்பு ஏற்புடையதல்ல..! இராணுவம் வலுப் பெற வேண்டும் - சரத் பொன்சேகா வலியுறுத்து
நாட்டின் பாதுகாப்பு விவகாரங்களில் எந்தவித தளர்வுகளையும் மேற்கொள்ளக் கூடாது. இராணுவம் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டுமே தவிர, படைக்குறைப்பு செய்வது ஏற்புடைய நடவடிக்கை அல்ல என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தேசிய பாதுகாப்பு
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
"எமது நாடு கடந்த காலங்களில் மூன்று தடவைகள் ஆயுதக் கிளர்ச்சிகளைச் சந்தித்த ஒரு நாடாகும். அதேபோன்று, எதிர்காலத்தில் வெளியக அழுத்தங்களும் அச்சுறுத்தல்களும் கூட நமக்கு வரக்கூடும். எனவே, தேசிய பாதுகாப்பு என்ற விடயத்தில் எந்தக் காரணம் கொண்டும் தளர்வுப் போக்கைக் கடைப்பிடிக்கக் கூடாது.\

முப்படைகளும் எப்போதும் பலமாக இருக்க வேண்டும். குறிப்பாகப் புலனாய்வு அமைப்புகள் மிகவும் வலுவான கட்டமைப்புடன் இயங்க வேண்டும்.
நாம் முள்ளிவாய்க்கால் போரை முடிவுக்குக் கொண்டுவந்த போது, மிகவும் பலம் பொருந்திய இராணுவக் கட்டமைப்பு நம்மிடம் இருந்தது. ஆனால், தற்போதைய நிலையில் அதில் 20 சதவீதமானவர்களே எஞ்சியிருக்கக் கூடும்.
ஏனையோர் அனைவரும் ஓய்வுபெற்றிருக்கலாம். ஒரு போர் ஏற்பட்ட பிறகு அவசர அவசரமாகக் கட்டியெழுப்பப்பட வேண்டியதொன்றல்ல இராணுவக் கட்டமைப்பு.
படைக்குறைப்பு
நாட்டில் போர்ச் சூழல் நிலவினாலும் இல்லாவிட்டாலும், நாட்டின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு ராணுவம் எப்போதும் பலமாகவே பேணப்பட வேண்டும்.
நான் இராணுவத் தளபதி பதவியிலிருந்து விலகும்போது நம்மிடம் 2 இலட்சம் ராணுவத்தினர் இருந்தனர். ஆனால், அந்த எண்ணிக்கை தற்போது பெருமளவில் குறைவடைந்துள்ளதுடன், தற்போதைய அரச தரப்பில் படைக்குறைப்பு பற்றியும் பேசப்பட்டு வருகின்றது.

இது எந்த வகையிலும் ஏற்புடைய விடயம் அல்ல. முப்படைகளும் தத்தமது பலத்தைத் தக்கவைத்திருக்க வேண்டும்.
உலக வரைபடத்தில் சிங்கப்பூர் மிகச் சிறிய நாடாக இருந்தபோதிலும், தங்களது நாட்டின் வருடாந்த வரவு - செலவுத் திட்டத்தில் பாதுகாப்புத் துறைக்கே அவர்கள் அதிகளவிலான நிதியை ஒதுக்குகின்றார்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது" என சுட்டிக்காட்டியுள்ளார்.
148 தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளோம் - நேபாளத்திலிருந்து வீடியோ வெளியிட்ட தேச மங்கையற்கரசி News Lankasri
தண்ணீர் மற்றும் டின் உணவுகளைச் சேமித்து வைக்குமாறு மக்களுக்கு பிரித்தானியா அறிவுறுத்தல் News Lankasri