இலங்கையில் 60 வீதமானவர்களுக்கு போசாக்கான உணவு கிடைப்பதில்லை
இலங்கையில் சுமார் 60 வீதமானவர்களுக்கு போசாக்கான உணவுகள் கிடைப்பதில்லை என உணவு உரிமை தொடர்பில் கண்காணிக்கும் தேசிய நிறுவனம் தெரிவித்துள்ளது.
கருத்துக் கணிப்பு ஒன்றின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கோவிட் பெருந்தொற்று பரவுகையின் பின்னர் இவ்வாறு போசாக்கான உணவுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.
நாட்டின் பத்து மாவட்டங்களில் இந்த கருத்துக் கணிப்பு நடாத்தப்பட்டுள்ளது.
கொழும்பு, யாழ்ப்பாணம், புத்தளம், கம்பஹா, களுத்துறை, காலி, மட்டக்களப்பு, கண்டி, நுவரெலியா மற்றும் பதுளை உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கருத்துக் கணிப்பில் பங்கு பற்றியவர்களில் 71 வீதமான குறைந்த விலையில் உணவுப் பொருட்கள் கொள்வனவு செய்துள்ளனர் எனவும், 69 வீதமானவர்கள் வாரமொன்றில் ஐந்து நேரம் உணவு உட்கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளது.
இவ்வாறு கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் 14 வீதமானவர்கள் வாரமொன்றில் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் ஒருவேளை உணவையேனும் பெற்றுக்கொண்டதில்லை என கருத்துக் கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது.