நாடு முழுவதும் களைகட்டிய ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்
புதுவருடப்பிறப்பினையொட்டி கிழக்கு மாகாணத்தில் உள்ள தேவாலயங்களில் நள்ளிரவு ஆராதனைகள் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான வழிபாடு மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியால் பேராலயத்தில் நடைபெற்றது.
ஆலயத்தின் பங்குத்தந்தை அருட்தந்தை ஜெமில்டன் தலைமையிலான அருட்தந்தையர்களினால் புதுவருடத்தினையொட்டி விசேட திருப்பலி பூஜைகள் நடைபெற்றன.

இதன்போது துநாட்டில் நீடித்த சமாதானமும் சாந்தியும் வேண்டி விசேட பிரார்த்தனைகள் முன்னெடுக்கப்பட்டதுடன் இயற்கை அனர்த்தங்களில் இருந்து மக்களை பாதுகாக்க விசேட பிரார்த்தனைகளும் நடைபெற்றன.

புதுவருட பிறப்பினையொட்டி இதன்போது விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன் அனைவருக்கும் ஆசிர்வாதமும் வழங்கப்பட்டது.
புதுவருட சிறப்பு வழிபாட்டில் மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

செய்தி - குமார்
மன்னார்
மன்னாரில் நேற்றைய தினம் புதுவருட வியாபார நடவடிக்கைகள் சூடுபிடித்திருந்தது.
இந்த நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் மன்னார் நகர பகுதிக்கு வருகை தந்து ஆர்வத்துடன் பொருட்களை கொள்வனவு செய்திருந்தனர்.
நத்தார், புதுவருட பண்டிகையை முன்னிட்டு மன்னார் நகரசபையினால் வருடா வருடம் பண்டிகைக்கால வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள கேள்வி கோரல் மூலம் இடம் ஒதுக்கப்பட்டு டிசம்பர் மாதம் 20ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி நள்ளிரவு வரை வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள இடம் ஒதுக்கப்பட்டு வருகின்றமை வழமை.
இந்த நிலையில் இம்முறை உள்ளூர் மற்றும் தென் பகுதி வர்த்தகர்கள் இடங்களை பெற்று பண்டிகைக்கால வியாபார நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்த நிலையில், பொலிஸார் விசேட நடவடிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


