வன்முறை செயல்களில் அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: உயர் அதிகாரி தகவல்
வன்முறை செயல்களில் அதிகாரத்தை கைப்பற்றும் முயற்சி அல்லது அரசாங்க கட்டிடங்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருதல் போன்ற செயல்களில் ஈடுபடும் குழுக்கள், அமைப்புகள் அல்லது அரசியல் கட்சிகளை தடை செய்வது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக சிரேஷ்ட அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சிரேஷ்ட அரசாங்க அதிகாரி ஒருவரை சுட்டிக்காட்டி இவ்வாறு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் அச்செய்தி குறிப்பில் தெரிவிக்கப்படுவதாவது, “சில குழுக்கள் ஆகஸ்ட் 9 ஆம் திகதி கொழும்பில் மற்றொரு எதிர்ப்பு போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானதை தொடர்ந்து இந்த நடவடிக்கை தீவிரமாக பரிசீலிக்கப்படுகிறது.
பயங்கரவாத நடவடிக்கை
அரசு கட்டிடங்கள் அல்லது நிர்வாக மையங்களை கைப்பற்றி ஆக்கிரமித்து பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பது பயங்கரவாத நடவடிக்கைகளாக பார்க்கப்படும். ஆனால் கடுமையான நடவடிக்கைகளால் அமைதியான போராட்டங்கள் பாதிக்கப்பட கூடாது.
சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியதாக கூறப்படும் 40 பேரின் புகைப்படங்கள் மற்றும் அவர்களின் அடையாளங்கள் பற்றிய தகவல்களை பொலிஸார் பொதுமக்களுக்கு சென்றடையும் வகையில் எதிர்வரும் நாட்களில் ஊடகங்களில் வெளியிடயுள்ளார்கள்.
பொலிஸார் விசாரணை
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு அருகாமையில் உள்ள தடைகளை உடைத்து அப்பகுதிக்குள் நுழைந்த சுமார் 300 பேர் மீதும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
மேலும் குற்றம் நடந்த இடத்திலிருந்து 20 பேரின் கைரேகைகளும் பெறப்பட்டுள்ளன.
இதேவேளை ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், அலரிமாளிகை மற்றும் பிரதமர் அலுவலகம் போன்றவற்றில் சொத்துக்களை திருடியவர்களைக் கண்டறிய சிசிடிவி மற்றும் காணொளி காட்சிகள் மூலம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
பயங்கரவாதிகளாக முத்திரை குத்தப்படும் அப்பாவி மக்கள்! விஜித ஹேரத் |