ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் பாரிய மண்சரிவு (Video)
நுவரெலியா - கினிகத்தேனை பகுதியில் நேற்று (07.12.2023) மாலை பெய்த கடும் மழை காரணமாக ஹட்டன், கொழும்பு பிரதான வீதியின் தியகலை பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற கால நிலையினை தொடர்ந்து மத்திய மலைநாட்டின் சரிவு பகுதிகளில் மாலை வேளையில் கடும் மழை பெய்து வருகிறது.
இதேவேளை, நேற்று நுவரெலியா மாவட்டத்திலும் பல பிரதேசங்களில் கடும் மழை பெய்தமையால் நேற்று இரவு எட்டு மணியளவில் குறித்த மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
பொது மக்கள் பாதிப்பு
இதனால் அந்த வீதியூடான போக்குவரத்து தியகலை பகுதியில் துண்டிக்கப்பட்டுள்ளதனால் ஹட்டன், கொழும்பு மற்றும் ஹட்டன் கண்டி ஆகிய பிரதேசங்களுக்கு செல்லும் மக்கள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் அறிவித்துள்ளனர்.

மண்சரிவு காரணமாக இன்று கொழும்பு செல்லும் பொது போக்குரவத்து பேருந்துகள்
நோட்டன் வழியாகவும், கண்டி செல்லும் வாகனங்கள் போகவத்த பத்தனை ஊடாகவும்
பயணிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பொது போக்குவரத்து தடைப்பட்டதன் காரணமாக பாடசாலை செல்லும் மாணவர்கள், மற்றும் அரச ஊழியர்கள் உட்பட பொது மக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
போக்குவரத்தினை வழமைக்கு கொண்டு வருவதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் பாதுகாப்பு பிரிவினர் இணைந்து நடவடிக்கைகள் மேற்கொண்ட போதிலும் தொடர்ந்து மண் சரிவதனால் தாமதம் ஏற்பட்டுள்ளன.
விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இந்த மண்சரிவு குறித்து கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் மேற்பார்வையினையும் ஆராய்வினையும் தொடர்ந்து பிரதான வீதி ஊடான போக்குவரத்தினை வழமை நிலைக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியாக மழை பெய்து வருவதனால் ஹட்டன் - கொழும்பு மற்றும் ஹட்டன் - நுவரெலியா
பிரதான வீதிகளில் பல இடங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளமையும்
குறிப்பிடத்தக்கது.
எனவே இந்த வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மற்றும் பொது மக்கள் மிகவும் அவதானமாக நடந்து கொள்ள வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வீதியில் சரிந்து விழுந்துள்ள மண் மேடுகள் மற்றும் மரங்களை அகற்றும் பணியினை இன்று அதிகாலை முதல் வீதி போக்குவரத்து அதிகாரசபை ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு பிரிவினர் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பாகிஸ்தான் T20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ICC உயர் அதிகாரி: சர்ச்சை கிளப்பிய நிகழ்வு News Lankasri
ஜனனி உயிருடன் இருப்பதை அறிந்து அதிர்ச்சியடையும் குணசேகரன்.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான்.. Cineulagam