ஒரே நாளில் 906 பேர் கைது: போதை ஒழிப்பு திட்டத்தின் தீவிரம்
ஜனாதிபதியின் விசேட பணிப்புரைக்கமைய, போதைப்பொருள் அற்ற தேசத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில் முன்னெடுக்கப்படும் “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய திட்டத்தின் கீழ் 906 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கை நேற்றுமுன் தினம்(14.03.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட இந்த விசேட சுற்றிவளைப்புகள் குறித்து பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளதாவது,
906 பேர் கைது
நேற்றுமுன் தினம்(14) ஒரே நாளில் 965 சுற்றிவளைப்புச் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
அதில் கைது செய்யப்பட்டவர்களில் 9 பேர் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், சட்டவிரோத சொத்து குவிப்பு தொடர்பான விசாரணைகளுக்கமைய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையான 4 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து பெருமளவிலான போதைப்பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
அதற்கமைய, சந்தேகநபர்களிடமிருந்து, 510 கிராம் ஹெரோயின், 788 கிராம் ஐஸ், 70 கிலோகிராம் 264 கிராம் கஞ்சா, 11 ஆயிரத்து 38 கஞ்சா செடிகள், 5 கிராம் குஷ் ரக போதைப்பொருள், 70 கிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள், 1,783 போதை மாத்திரைகள், 930 கிராம் மதனமோதகம் மற்றும் 319 கிராம் மாவா போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அரசின் இந்தத் தேசிய திட்டத்தின் கீழ் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்றும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.