அரச திறைசேரியில் கோடி ரூபா மாயம் : அரசு அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் - திஸ்ஸ அத்தநாயக்க சாடல்
அரச திறைசேரியில் சுமார் 80 கோடி ரூபா பணம் காணாமல்போயுள்ளது என்றும், இதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் நேரடிப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
எதுல்கோட்டேயிலுள்ள அக்கட்சியின் தலைமைப் பணிமனையில் நேற்று(04.05.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
அரசின் நிதி முகாமைத்துவக் கட்டமைப்பு
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் அனுப்பிய டொலர் வருமானம் மற்றும் சுற்றுலாத்துறை மூலம் ஈட்டப்பட்ட மக்களின் பணமே இவ்வாறு மாயமாகியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியிடமிருந்த கடன் முகாமைத்துவப் பணிகள் நிதி அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்ட முதல் சந்தர்ப்பத்திலேயே இவ்வாறான பாரிய முறைகேடு இடம்பெற்றிருப்பது, அரசின் நிதி முகாமைத்துவக் கட்டமைப்பு முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதையே காட்டுகின்றது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிதி விவகாரம் தொடர்பாகப் பணிநீக்கம் செய்யப்பட்ட அதிகாரி ஒருவரின் மரணம் குறித்து திஸ்ஸ அத்தநாயக்க கடும் சந்தேகம் எழுப்பினார்.
அதிகாரியின் மரணத்தைப் பொலிஸார் முன்கூட்டியே 'தற்கொலை' எனத் தீர்மானிப்பது சிக்கலானது. அரசு தனது தவறுகளை மறைக்க உயிரிழந்த அதிகாரி மீது பழியைச் சுமத்த முயல்கின்றது.
அனுபவமற்ற ஜே.வி.பி. உறுப்பினர்களைத் திறைசேரியின் முக்கிய பதவிகளில் நியமித்ததே இக்குழப்பங்களுக்குக் காரணம் என்றும் திஸ்ஸ அத்தநாயக்க கூறினார்.
மே தினக் கூட்டங்களுக்காக
மே முதலாம் திகதி மக்கள் எதிர்ப்பைத் தவிர்க்கவே, எரிபொருள் விலை அதிகரிப்பை அரசு திட்டமிட்டு மே இரண்டாம் திகதிக்கு மாற்றியது என்றும் அவர் குற்றம் சுமத்தினார்.

பெற்றோலுக்கு 49வீதம் மற்றும் டீசலுக்கு 64வீதம் என அதிகப்படியான வரிகளை அரசு அறவிடுகின்றது என்றும், ஒரு லீற்றர் எரிபொருளில் 100 ரூபா நட்டம் ஏற்படுவதாக அரசு கூறுவது முற்றிலும் பொய் என்றும் அவர் வெளிப்படுத்தினார்.
ஜனாதிபதி மே தினக் கூட்டங்களுக்காகப் பெருமளவிலான அரச வாகனங்களையும், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினரையும் பயன்படுத்தி சுமார் 30 முதல் 40 மில்லியன் ரூபா வரையிலான மக்கள் பணத்தை வீணடித்துள்ளார் என்றும் சாடியுள்ளார்.