மன்னார் மாவட்டத்தில் மேலும் 80 தொற்றாளர்கள் அடையாளம் - வைத்தியர் ரி.வினோதன்
தலைமன்னார் - பியர் பகுதியில் 62 பேர் தற்போது வரை கோவிட் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், தலைமன்னார் பியர் மேற்கு மற்றும் தலைமன்னார் பியர் கிழக்கு ஆகிய இரண்டு கிராம அலுவலகர் பிரிவுகளும் இன்று காலை முதல் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.
மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் மாவட்டத்தில் கடந்த புதன் மற்றும் வியாழன் ஆகிய இரு தினங்கள் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனைகளின் போது மேலும் புதிதாக 80 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களுடன் சேர்த்து இம்மாதம் தற்போது வரை 252 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தற்போது வரை 759 தொற்றாளர்கள் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தற்போது அடையாளம் காணப்பட்டவர்களில் 29 பேர் தலைமன்னார் பியர் பகுதியில் ஏற்கனவே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டவர்களாகவும், ஒருவர் தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தராகவும் காணப்பட்டுள்ளனர்.
மேலும் 2 பேர் தலைமன்னார் கிராமத்தைச் சேர்ந்தவராகவும்,25 பேர் நடுக்குடா பகுதியில் உள்ள கடல் உணவு பதனிடும் தொழிற்சாலையில் பணியாற்றுகின்றவர்களாகவும் காணப்படுகின்றனர். மேலும் மன்னார் நகரப் பகுதியில் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களுடன் தொடர்புடைய 14 பேரும், மேலும் ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இது வரையில் தலைமன்னார் பியர் பகுதியில் 62 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தலைமன்னார் பியர் மேற்கு மற்றும் தலைமன்னார் பியர் கிழக்கு ஆகிய இரண்டு கிராம அலுவலகர் பிரிவுகளும் இன்று வெள்ளிக்கிழமை (25) காலை முதல் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இப்பகுதியில் எடுக்கப்பட்ட பி.சி.ஆர்.மாதிரிகள் கொழும்பு ஜெயவர்த்தன புர பல்கலைக்கழகத்திற்குப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மரபனு பகுப்பாய்வு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்குத் தொற்று ஏற்பட்ட வைரஸ் புதிதாகத் திரிபடைந்த வைரசின் ஏதாவது ஒன்றா? என்கின்ற முடிவுகள் ஒரு வாரத்தில் கிடைக்கப் பெறும் என எதிர் பார்க்கின்றோம். தற்போது நூறு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொண்டால் 6 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்படுகின்றது.
இது அபாயகரமான நிலைமையாகும். எனவே மக்கள் இதனை உணர்ந்து பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டாலும் சுகாதார நடைமுறைகளை பின் பற்றி தேவை இன்றி வீடுகளில் இருந்து வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
நேற்றைய தினம் வியாழக்கிழமை(24) மன்னாரில் சமூக தடுப்பூசி வழங்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டது.முதல் கட்டமாக மன்னாரில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் கடமையாற்றுகின்ற 494 பேருக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
எஞ்சிய நபர்களுக்கும், நடுக்குடா பகுதியில் உள்ள கடல் உணவு பதனிடும் தொழிற்சாலையில் பணியாற்றுகின்றவர்களுக்கும் தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் இது வரை 5 கோவிட் மரணம் நிகழ்ந்துள்ளது.
மூன்று
தினங்களுக்கு முன்னர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று
வந்த 71 வயதுடைய பெண் ஒருவர் கோவிட்டினால் ஏற்பட்ட நிமோனியா காய்ச்சலினால்
உயிரிழந்துள்ளார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.








அமெரிக்காவில் 11 வருடங்கள்... இந்தியா திரும்பியவர் 3 ஆண்டுகளில் உருவாக்கிய ரூ 280 கோடி நிறுவனம் News Lankasri
