மண்ணெண்ணை பற்றாக்குறையால் பாதிக்கப்படும் 7ஆயிரம் கடற்தொழில் குடும்பங்கள்
முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டு மாதங்களுக்கு மேல் எரிபொருள் இல்லாத நிலையினால் 1500 வரையான படகுகள் தொழில் செய்யமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கடற்தொழிலாளார் சங்கங்களின் சம்மேளன தலைவர் அருள்நாதன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு ஊடக அமையத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இது தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில், கடலினை நம்பி வாழும் எங்கள் கடற்தொழிலாளர்கள் 7000 வரையான குடும்பங்கள் கடலை நம்பி வாழ்கின்றார்கள்.
மண்ணெண்ணைய் இல்லாத நிலையில் கடற்தொழிலுக்கு செல்லமுடியாத நிலையில் வாழ்ந்து வருகின்றார்கள்.
விவசாயிகளுக்கு பசளையினை இறக்கி கொடுத்துள்ளார்கள். ஆனால் மீனவர்களுக்கு மண்ணெண்ணையினை பற்றியும் சமுதாயம் பற்றியும் கடற்தொழில் அமைச்சர் மீனவர் கதைக்கவில்லை.
இன்று கள்ளச்சந்தையில் 1100 ரூபாவிற்கு மண்ணெண்ணைய் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. இது எங்கிருந்து வருகின்றது.
கொழும்பில் எரிபொருள் சுத்திகரிக்கும் இடத்தில் இருந்து நீர்கொழும்பு, சிலாபம் ஊடாக சில முதலாளிகள் வெள்ளை மண்ணெண்ணையினை முல்லைத்தீவில் விற்பனை செய்து வருகின்றார்கள்.
இந் நிலையில் இந்திய இழுவைப்படகுகள் எங்கள் வளங்களை அழிக்கின்றன. கடற்படை ஒன்று மட்டும் செய்கின்றார்கள் எங்கள் நாட்டில் வாழமுடியாத நிலையில் மக்கள் கடல்வழியாக தப்பிசெல்லும்போது உதவி செய்கிறார்கள்.
ஆனால் இந்திய படகுகளை கண்டுகொள்கின்றார்கள் இல்லை. இந்நாட்டில் ஐனாதிபதி பதவிவிலகுவதாக கூறி தப்பி ஓடியுள்ளார். பிரதமர் பதவி விலக கோரி மக்கள் ஆர்ப்பாட்டம் நடக்கின்றது.
இந்நிலைமையில் தான் எம் மக்கள் வாழ்கின்றார்கள். நாங்கள் அரசாங்க அதிபரிடம் சொல்லி நிற்கின்றோம் கடற்தொழிலாளர்களுக்கு இந்நிலைமை தொடர்ந்தால் அடுத்தகட்டம் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளோம். எங்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படவேண்டும். அல்லது மண்ணெண்ணைய் வழங்க ஆவண செய்யவேண்டும்.
விவசாயிகளுக்கு டீசல் வழங்குகின்றார்கள். ஆனால் கரைவலைசெய்யும் கடற்தொழிலாளர்களுக்கு டீசல் வழங்குகின்றார்கள் இல்லை கேட்டால் அத்தியவசிய தேவைக்குமாத்திரம் டீசல் வழங்குவதாக கூறுகின்றார்கள்.
எமது கடல் வளத்தினை தொடர்ச்சியாக இந்திய இழுவை படகுகள் அழித்து வருகின்றன. இனிமல் முல்லைத்தீவு கடலில் இந்திய இழுவை படகு வந்தால் எவருக்கும்
அறிவிக்கப்போவதில்லை. நாங்கள் பிடித்துகொண்டு வருவோம் அதற்கான தீர்மானம்
சங்கங்களை எடுத்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.