மன்னார் மாவட்டத்தில் மேலும் 7 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் - பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்
மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் மேலும் 7 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், மக்கள் மன்னார் நகர்ப் பகுதிக்குத் தேவை இல்லாமல் வருவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.
மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் மாவட்டத்தில் கடந்த மாதத்தை விட இம்மாதம் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றது.
மன்னார் மாவட்டத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் போது நேற்றைய தினம் மேலும் 7 கோவிட் தொற்றாளர்கள் சமூகத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களின் 3 நபர்கள் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டவர்கள். ஏனையவர்களில் 3 நபர்கள் மன்னார் நகர்ப் பகுதியில் வர்த்தக நிலையங்களில் கடமையாற்றியவர்கள்.
ஏனைய ஒருவர் ஆசிரியராக அண்மையில் கொழும்பிற்குச் சென்று வந்தவராகக் காணப்படுகின்றார். இந்த மாதம் முதல் ஆறு நாட்களில் 13 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் 21 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த வருடம் 355 கோவிட் தொற்றாளர்களும், மொத்தமாக 372 தொற்றாளர்களும் மன்னார் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த 6 நாட்களில் மன்னார் மாவட்டத்தில் 590 பி.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், 120 பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் கிடைக்கப் பெறவில்லை. இதுவரை மன்னார் மாவட்டத்தில் 14 ஆயிரத்து 530 பி.சி.ஆர்.பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளோம்.
மக்களிடம் அவசர கோரிக்கை ஒன்றை முன்வைக்கின்றோம். இந்த மாதம் முக்கிய தீர்மானமிக்க மாதமாக உள்ளது. மக்கள் கடுமையான சுகாதார நடை எவருடைய கண்காணிப்பும் இன்றி சுயமாக கடைப்பிடிக்க வேண்டும்.
மன்னார் நகர்ப் பகுதிக்கு மக்கள் தேவை இல்லாமல் வருவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். பொதுப் போக்குவரத்தைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
உணவகங்களில் அமர்ந்து சாப்பிடுதல், கூடி நின்று கதைத்தல் போன்ற செயற்பாடுகளைத் தவிர்த்து கொள்ளுங்கள். தமது தேவைகள் முடிவடைந்த உடன் வீடுகளுக்குச் செல்லுங்கள்.
உணவக உரிமையாளர்கள் ஏற்கனவே சுகாதார தரப்பினரால் அறிவுறுத்தப்பட்டமைக்கு அமைவாக அங்கீகரிக்கப்பட்ட எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களை மாத்திரம் உணவகங்களினுள் வைத்திருக்க முடியும்.
குறித்த பிரச்சினை நீண்ட காலத்திற்கு இருக்கும் என்பதால் மக்கள் வீடுகளில் இருந்து உணவு, ஏனைய பொருட்களைப் பெற்றுக்கொள்ளுவதற்கான பொறிமுறை ஒன்றை ஏற்படுத்தினால் சாலச்சிறந்தது.
ஏனைய நிறுவனங்களும் மக்களை தமது அலுவலகங்களுக்கு அழைக்காது மக்களின் இடங்களுக்கு இணைய வழியாகவே அல்லது நேரடியாகவே சென்று சேவைகளை வழங்கக்கூடிய பொறி முறைகளை ஏற்படுத்துவது சிறந்தது.
இந்தியாவிலிருந்து தலைமன்னார் பகுதிக்குச் சட்ட விரோதமான முறையில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் வருகை தந்த நிலையில் கைது செய்யப்பட்ட 2 நபர்களுக்கும், அவர்களை அழைத்து வந்தவர்கள் என 3 நபர்களுக்கும் இரணைதீவு பகுதியில் வைத்து பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்தியாவிலிருந்து வருகை தந்தவர்களில் ஒருவர் ஏற்கனவே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
ஏனைய 3 நபர்களுக்கும் பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் இவர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட கடற்படையினர் மற்றும் பொலிஸார் உட்பட குறித்த 21 பேருக்கும், இவர்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த இரணைதீவு பகுதியில் குறித்த பி.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பரிசோதனை மாதிரிகள் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு பரிசோதனை
மேற்கொண்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.