தமிழர் பகுதியில் ஆறு மாத குழந்தைக்கு யானையினால் நேர்ந்த அனர்த்தம்
அம்பாறை - அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள பள்ளக்காடு பிரதேசத்தில் யானை தாக்குதலினால் 6 மாத ஆண் குழந்தையொன்று இன்று உயிரிழந்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருக்கோவில் பிரதேசத்தைச் சேர்ந்;த 6 மாதம் கொண்ட சுதர்சன் சதுர்சன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
சம்பவ இடத்திலேயே பலியான குழந்தை
திருக்கோவில் பிரதேசத்தைச் சேர்ந்த இளம் குடும்பமான கணவன்,மனைவி அட்டாளைச்சேனை பிரதேசத்தில் ஒருவரின் மாட்டுப்பட்டி மாடுகளை பராமரிக்கும் வேலையை பள்ளக்காடு பிரதேசத்தில் தங்கியிருந்து செய்துவரும் நிலையில், சம்பவதினமான இன்று மாலை அந்த பகுதியிலுள்ள மரத்தின் கீழ் பாயில் குழந்தையை படுக்க வைத்துவிட்டு மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த போது திடீரென அங்கு வந்த யானை மரத்தின் கீழ் படுத்திருந்த குழந்தையை தாக்கியுள்ளது.
இதன்போது குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
இதனையடுத்து உயிரிழந்த குழந்தையை அங்கிருந்து மீட்டு அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



