அநுர அரசாங்கத்தின் அடுத்த அதிரடி நடவடிக்கை : கோடி ரூபா சொத்துக்கள் முடக்கம்
இந்த ஆண்டில் இதுவரையில் சுமார் 500 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் தற்காலிக அடிப்படையில் முடக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது.
திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பாதாள உலகக்குழு உறுப்பினர்களது என சந்தேகிக்கப்படும் சொத்துக்களே அதிகளவில் இவ்வாறு முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குற்றச்செயல்கள் தொடர்பில் விசாரணை
பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.
இவ்வாறு முடக்கப்பட்ட சொத்துக்களில் சில அரசியல்வாதிகளின் சொத்துக்களும் உள்ளடங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட குற்றச் செயல்களின் ஊடாக ஈட்டப்பட்ட சொத்துக்களை முடக்கும் சட்டத்தின் அடிப்படையில் இந்த சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த குற்றச்செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களது சொத்துக்களை பொறுப்பேற்று பராமரிப்பதற்காக விசேட அதிகார சபையொன்றை உருவாக்குவதற்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.




