மின்சாரம் தாக்கி உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்தினருக்கு 50 இலட்ச ரூபாய் நஷ்டயீடு (Photo)
மஸ்கெலியா - சாமிமலை கவரவில தோட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நபரின் குடும்பத்தினருக்கு 50 இலட்ச ரூபாய் நஷ்டயீடு தொகை வழங்க நேற்று (08.12.2022) ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கடந்த மாதம் ஹொரண பெருந்தோட்ட கம்பனிக்கு சொந்தமான சாமிமலை கவரவில தோட்டத்தை சேர்ந்த நல்லையா சிவக்குமார் (வயது 33) மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
இதற்கான எழுத்து மூல ஆவணத்தை ஹொரண பெருந்தோட்ட நிர்வாகத்தினர், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டயீடு
குறித்த நபரின் மரணம் தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தலைமையிலான குழுவினர் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டியுள்ளனர்.
கோரிக்கை
பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தாருக்கு நியாயமான இழப்பீட்டுத் தொகை ஒன்று வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் ஹொரண பெருந்தோட்ட கம்பனியிடம் முன் வைத்துள்ளனர்.
எனவே உயிரிழந்த நபரின் மனைவிக்கு தோட்டத்தில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் பணிபுரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதோடு, குறித்த குடும்பத்தினருக்கு 20 பேர்ச் காணியும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

