கற்பிட்டியில் வீதி விபத்து: 5 வயது சிறுவன் உயிரிழப்பு
கற்பிட்டி - நுரைச்சோலை ஜூம்ஆ மஸ்ஜிதுக்கு முன்பாக இடம்பெற்ற வீதி விபத்தில் ஐந்து வயதுச் சிறுவன் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
கற்பிட்டி - தலவில பகுதியைச் சேர்ந்தவர்களே இந்த விபத்தில் சிக்கியுள்ளனர் என்று நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்றிரவு (19.10.2023) கற்பிட்டி பகுதியிலிருந்து பாலாவியை நோக்கிப் பயணித்த லொறியும், எதிர்த் திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த சிறுவனின் தாய் தொழில் நிமித்தம் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில், அவர் தனது தந்தையோடு மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தபோதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
மோட்டார் சைக்கிளில் உயிரிழந்த ஐந்து வயது சிறுவன் உட்பட மூவர் பயணித்துள்ளனர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் உட்பட மூவரையும் சிகிச்சைக்காக அங்கிருந்தவர்கள் உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் சேர்த்ததையடுத்து காயமடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று புத்தளம் திடீர் மரண விசாரணை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
லொறியின் சாரதி கைது
மேலும், விபத்தில் படுகாயமடைந்த இருவரும் புத்தளம் தள வைத்தியசாலையில் இருந்து, மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட இருவரில் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் என்று கொழும்பு வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற சாரதி, முறையற்ற வகையில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றமையால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதேவேளை விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்து சம்பவம் தொடர்பில் நுரைச்சோலை பொலிஸ் நிலையத்தின்
போக்குவரத்து பொலிஸார் மேலதிக
விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
