யால தேசிய சரணாலயத்தை சுற்றிப் பார்க்க சென்ற 5 பயணிகள் கைது
யால தேசிய சரணாலயத்திற்குள் வனவிலங்கு சட்டங்களை மீறி செயற்பட்ட ஐந்து சுற்றுலாப் பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் இன்று(15.06.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யால தேசிய சரணாலயத்தில் சுது வெலிமுல்ல பகுதியில் சஃபாரி பயணம் சென்ற இரண்டு ஜீப் வண்டிகளில் இருந்த குழுவினர், சரணாலயத்தின் விதிகளை மீறி ஜீப் வண்டிகளில் இருந்து கீழே இறங்கி நடந்து சென்றுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
5 பயணிகள் கைது
இதன்போது, குறித்த பயணிகளை வனவிலங்கு அதிகாரிகளையும் அச்சுறுத்தியுள்ளனர். அதன் பின்னர், சம்பந்தப்பட்ட நபர்களைக் கைது செய்து திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, யால ஜீப் சங்கங்களின் கூட்டமைப்பு குறிப்பிடுகையில், யால சரணாலயத்திற்குள் ஜீப் சாரதியோ அல்லது வேறு நபரோ விதிகளை மீறினால், அவர்களைக் கைது செய்வதற்கும், சம்பந்தப்பட்ட ஜீப் வண்டிகளுக்கு சஃபாரி சேவைத் தடை விதிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ஜீப் வண்டிகள் தொடர்பில் முறையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், அந்த ஜீப் வண்டிகள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.