வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட 5 வர்த்தக நிலையங்கள் சுகாதாரப்பிரிவினரால் விடுவிப்பு
வவுனியாவில் பயணக்கட்டுப்பாடு விதிமுறைகளை மீறிச் செயற்பட்டதாக மூடப்பட்ட 5 வர்த்தக நிலையங்கள் சுகாதாரப் பிரிவினரால் விடுவிக்கப்பட்டதுடன், நிபந்தனைகளின் அடிப்படையில் வீடுகளுக்குக் கொண்டு சென்று அத்தியாவசியப் பொருட்களை வழங்கவும் இன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட் அச்சுறுத்தல் காரணமாக நாடு பூராகவும் முழுமையான முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மக்களது அத்தியாவசிய தேவைகளைப் பெறும் வகையில் மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வீடு வீடாகச் சென்று வழங்குவதற்குப் பிரதேச செயலகங்கள் ஊடாக சில வர்த்தக நிலையங்களுக்கு பாஸ் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வவுனியா பிரதேச செயலகம் ஊடாக வீடு வீடாகப் பொருட்களை விநியோகிப்பதற்கு அனுமதி பெற்றுக் கொண்ட வர்த்தக நிலையங்கள் தொடர்பில் விசேட சோதனை நடத்திய சுகாதாரப் பிரிவினர் வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் பயணக்கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறிச் செயற்பட்ட வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடு வீடாகப் பொருட்களை வழங்குவதற்கு வழங்கப்பட்ட பாஸ் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்திய வர்த்தக நிலையங்கள் என்பவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருந்தனர்.
இதன்போது பலசரக்கு வியாபார நிலையம் நான்கு, பாண் விற்பனை நிலையம் ஒன்று என 5 வர்த்தக நிலையங்கள் சுகாதாரப் பிரிவினரால் கடந்த ஞாயிற்றுக்கிழமை (06.09) மூடப்பட்டதுடன், குறித்த வர்த்தக நிலையங்கள் 14 நாட்கள் சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தல் சுவரொட்டி ஒட்டப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டன.
இந்நிலையில், அப்பகுதி மக்கள் அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக் கொள்ள இடர்பாடுகளை எதிர்நோக்கிய நிலையில் பண்டாரிக்குளம் பொது அமைப்புக்கள் மற்றும் கிராம அலுவலர் ஆகியோரின் கோரிக்கைக்கு அமைவாகக் குறித்த வர்த்தக நிலையங்கள் தனிமைப்படுத்தலிலிருந்து சுகாதாரப் பிரிவினரால் விடுவிக்கப்பட்டதுடன், வீடுகளுக்குக் கொண்டு சென்று அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்கும் அனுமதி மீள வழங்கப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தக நிலையங்களைத் திறக்காது பாஸ் அனுமதி நிபந்தனைகளுக்கு அமைவாகச்
சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி வீடுகளுக்குக் கொண்டு சென்று பொருட்களை வழங்க
வேண்டும் எனவும், இதனை பொது அமைப்புக்கள் கண்காணிக்கும் எனவும் தீர்மானம்
எட்டப்பட்டே குறித்த வர்த்தக நிலையங்கள் மீளச் செயற்படச் சுகாதாரப் பிரிவினரால்
பாஸ் அனுமதி மீள வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.