சுவிஸ் தூதுவரின் திருமண மோதிரம் உள்ளிட்ட களவாடப்பட்ட ஆபரணங்கள் மீட்பு
இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் சிரி வோல்ட்டின் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து களவாடப்பட்ட தங்க ஆபரணங்கள் மீட்கப்பட்டுள்ளன.
சுவிட்சர்லாந்து தூதுவரின் திருமண மோதிரம் உள்ளிட்ட தங்க ஆபரணங்கள் இவ்வாறு களவாடப்பட்டிருந்தது. விடுமுறைக்காக தாய் நாட்டுக்கு சென்றிருந்த போது இலங்கையில் அமைந்துள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் தங்க ஆபரணங்கள் களவாடப்பட்டிருந்தன.
இந்த தங்க ஆபரணங்களின் பெறுமதி சுமார் 45 லட்சம் இலங்கை ரூபா எனத் தெரிவிக்கப்படுகின்றது.
உத்தியோகபூர்வ இல்லத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்ட இரண்டு பேர் இணைந்து இந்த கொள்ளையை மேற்கொண்டதாக பொலிஸ் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்திருந்தனர்.
வீட்டின் பாதுகாப்புப் பெட்டகத்தினை திறப்பதற்கு போலியான சாவியொன்றை பயன்படுத்தியுள்ளதாகவும், அதில் இருந்த தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த போலி சாவியை செய்து கொடுத்த நபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். கொள்ளையிடப்பட்ட ஆபரணங்கள் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரின் வெலிகமவில் அமைந்துள்ள வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களை கைது செய்த பொலிஸார் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
சந்தேக நபர்களை எதிர்வரும் 22ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.