கண் பார்வையை இழந்த பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், சிறையில் சரியான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படாததால் தனது வலது கண் பார்வையில் 85 சதவீதத்தை இழந்துள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.
அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ள 73 வயதான இம்ரான் கானை, உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சட்டத்தரணி சல்மான் சப்தர் நேரில் சந்தித்து ஆய்வு செய்தார்.
அதன் பின் அவர் தாக்கல் செய்த 7 பக்க அறிக்கையில், கடந்த மூன்று மாதங்களாக இம்ரான் கான் கண் பார்வையில் மங்கல் மற்றும் தெளிவற்ற நிலை இருப்பதாக முறைப்பாடு அளித்தும், சிறை அதிகாரிகள் அதை அலட்சியப்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றம் கடும் கவலை
இதனால் அவருக்கு வலது கண்ணில் 'ரெட்டினல் வெயின் அக்லூஷன்' எனப்படும் ரத்த உறைவு பாதிப்பு ஏற்பட்டு, தற்போது வெறும் 15 சதவீத பார்வை மட்டுமே எஞ்சியுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

இந்தச் சூழலில், இம்ரான் கானின் உடல்நிலை குறித்து பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் கடும் கவலை தெரிவித்துள்ளது.
பிரதம நீதியரசர் யஹ்யா அப்ரிடி தலைமையிலான அமர்வு, உடனடியாக ஒரு மருத்துவக் குழுவை அமைத்து அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளது.
சிகிச்சைக்கு அனுமதி
மேலும், பெப்ரவரி 16ஆம் திகதிக்குள் லண்டனில் இருக்கும் அவரது மகன்களுடன் தொலைபேசியில் பேச அனுமதிக்குமாறும் சிறைத்துறைக்கு ஆணையிடப்பட்டுள்ளது.

இம்ரான் கானின் பி.டி.ஐ (PTI) கட்சி, இந்தச் செயலை "அரசு செய்த குற்றம்" என வர்ணித்துள்ளதோடு, அவரது தனிப்பட்ட மருத்துவர்களின் சிகிச்சைக்கும் அனுமதி கோரியுள்ளது.