தேசிய அடையாள அட்டை விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்
கடந்த ஒரு வருட காலத்தில் தபால்கள் மூலம் ஆட்பதிவு திணைக்களத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ள தேசிய அடையாள அட்டைகளின் எண்ணிக்கை சுமார் 3,800 என தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளிப்படுத்தியுள்ளது.
குறித்த தொகையில் 2,433 அடையாள அட்டைகள் 2005 ஆம் ஆண்டில் பிறந்த பாடசாலை விண்ணப்பதாரர்களுக்கு சொந்தமானவையாகும்.
இது சதவீத அடிப்படையில் 64 சதவீதமாகும். குறித்த விண்ணப்பதாரர்கள் 2005 ஆம் ஆண்டில் பிறந்திருந்த போதிலும், அவர்கள் 2020 ஆம் ஆண்டிலேயே விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர்.
தேசிய அடையாள அட்டை
தேசிய அடையாள அட்டையை வழங்குவதற்கு திணைக்களம் 4 வருட காலத்தை எடுத்துக் கொண்டுள்ளது.

அந்தக் காலப்பகுதியில் விண்ணப்பதாரரின் தனிப்பட்ட முகவரி மாறியமை, விண்ணப்பதாரர் வெளிநாடு சென்றமை, உயிரிழந்தமை மற்றும் முகவரிகள் பிழையாக குறிக்கப்பட்டிருந்தமை போன்ற காரணங்களால் அடையாள அட்டைகள் இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.
தேசிய கணக்காய்வு அலுவலகம்
தேசிய அடையாள அட்டை அச்சிடும் போது ஏற்பட்ட பிழைகள் மற்றும் புதிய அடையாள அட்டைகளை வழங்கும் போது பழைய அடையாள அட்டைகளை மீளப் பெற்றுக்கொள்ளப்படுகின்றது.

இந்த சந்தர்ப்பங்களில் சேகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளின் மொத்த எண்ணிக்கை கடந்த ஆண்டளவில் 6 லட்சத்தை நெருங்கியுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளிப்படுத்தியுள்ளது.
இவ்வாறு சேரும் அடையாள அட்டைகளை அழிப்பதற்கான முறையான செயற்திறன்மிக்க பொறிமுறை திணைக்களத்திடம் இல்லை எனவும் தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவிக்கிறது.
YOU MAY LIKE THIS VIDEO