பம்பலப்பிட்டியில் மோசடியில் ஈடுபட்ட இளம் யுவதி: சுற்றிவளைத்த பொலிஸார்
பம்பலப்பிட்டியில் போலி கல்வி நிறுவனமொன்றை நடத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 24 வயதுடைய யுவதி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்று (05) புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்ட நிலையில், 5 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
யுவதி நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாணவர்களை ஒன்லைன் ஊடாக இணைத்து, செயலமர்வுகளை நடத்தி, போலியான டிப்ளோமா சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள்
இதற்காக மாணவர் ஒருவரிடமிருந்து ஒரு இலட்சம் ரூபா முதல் 445,000 ரூபா வரை அறவிடப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக பணம் பெற்றுக்கொண்டமை தொடர்பில் இதுவரை 43 முறைப்பாடுகள் பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்துள்ளன.
இந்த கல்வி நிறுவனம் உள்ளூர் அல்லது சர்வதேச தரம் இன்றியும், தொழிற்கல்வி ஆணைக்குழுவின் அனுமதியின்றியும் நடத்திச்செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
