22 வது திருத்தச் சட்டம் 27 ஆம் திகதி நாடாளுமன்றத்திற்கு:இரட்டை குடியுரிமை பெற்றவர்களை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்ய முடியாது
20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்தும், 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் நன்மையான ஷரத்துக்களை உள்ளடக்கியும் உருவாக்கப்பட்டுள்ள 22 வது திருத்தச் சட்டம் எதிர்வரும் 27 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நீதியமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் திருத்தச் சட்டத்தின் மீதான முதலாவது வாசிப்பின் பின்னர் திருத்தச் சட்டம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்படவில்லை என்றால், நாடாளுமன்ற நிலையியல் கட்டளைச் சட்டங்களுக்கு அமைய விவாதத்திற்கு எடுக்க முடியும்.
22 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு அண்மையில் அமைச்சரவையில் அனுமதி கிடைத்தது. இதனையடுத்து திருத்தச் சட்டம் கடந்த ஜூன் 24 ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்டது எனவும் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இரட்டை குடியுரிமை பெற்றவர்களை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்ய முடியாது

இந்த திருத்தச் சட்டத்தின் ஊடாக இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுவது இரத்துச் செய்யப்படும்.
அத்துடன் வேறு நாடு ஒன்றின் பிரஜையாக இருக்கும் இலங்கையர், தேர்தலில் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட கூடாது எனவும் திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனது கையெழுத்தின் மூலம் ஜனாதிபதிக்கு கடிதத்தை அனுப்பி பதவி விலகினால், அல்லது நாடாளுமன்ற உறுப்பினராக இல்லை என்றால், பிரதமராக பதவி வகிப்பவர் அந்த பதவியை வகிக்க தகுதியற்றவர்.
எனினும் அமைச்சரவை சில காலம் செயற்பாட்டில் இருந்தால், பிரதமர் தனது பதவியை அதுவரை வகிக்கலாம் எனவும் திருத்தச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
திருத்தச்சட்டம் நடைமுறைக்கு வரும் நாளில் இருந்து அல்லது நாடாளுமன்றம் கலைக்கப்படும் காலப்பகுதியில் பிரதமர் மீது நாடாளுமன்றம் நம்பிக்கை இழந்துள்ளது என்பது ஜனாதிபதியின் நிலைப்பாடாக இருக்குமாயின் பிரதமரை பதவியில் இருந்து விலக்கலாம்.
பிரதமரிடம் ஆலோசிக்காது ஜனாதிபதி நியமனங்களை வழங்க முடியாது

ஜனாதிபதி பிரதமரிடம் கலந்துரையாடாது,நியமனங்களை வழங்கவோ, துறைகளை மாற்றவோ அல்லது , பணிகளை வழங்கவோ கூடாது என்பதுடன் மாற்றங்களையும் செய்யக்கூடாது.
பிரதமரின் ஆலோசனைக்கு அமைய ஜனாதிபதியின் கையெழுத்துடன் அனுப்பி வைக்கப்படும் கடிதம் மூலம் அமைச்சர் ஒருவரை பதவி நீக்க முடியும். அமைச்சர்கள், ஜனாதிபதிக்கு தமது கையெழுத்துடன் கடிதத்தை அனுப்பி பதவியில் இருந்து விலக முடியும்.
நாடாளுமன்ற உறுப்பினர் அல்லாத ஒருவர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராகவோ, பிரதியமைச்சராகவோ பதவி வகிக்க முடியாது எனவும் 22 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
திருத்தச் சட்டத்தை நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரல் புத்தகத்தில் உள்ளடக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.