21வது திருத்த வரைவுக்கு அமைச்சரவை ஒப்புதல்! விரைவில் நாடாளுமன்றுக்கு!
21க்கு அமைச்சரவை ஒப்புதல்
ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைத்து நாடாளுமன்றத்துக்கு அதிகாரங்களை கையளிக்கும் வகையில் வரையப்பட்ட 21வது அரசியல் அமைப்பு வரைவுக்கு, அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த தகவலை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ வெளியிட்டுள்ளார்.
இந்தநிலையில் குறித்த வரைவு விரைவில் நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் பின்னர் அந்த நகல் அரசியலமைப்புடன் ஒத்துப்போகிறதா? என்பதற்கான வியாக்கியானத்துக்காக, சபாநாயகரால் உயர்நீதிமன்றுக்கு அனுப்பப்படவுள்ளது.
இதன்போது இந்த வரைவை சவாலுக்கு உட்படுத்த உயர்நீதிமன்றம் இரண்டு வார கால அவகாசத்தை வழங்கும்.
நாடாளுமன்றில் ஒரு மாதம் செல்லும்
உயர்நீதிமன்றின் வியாக்கியானத்துடன் திருத்தங்கள், நாடாளுமன்றில் இரண்டாம் வாசிப்புக்காக எடுக்கப்படுவதற்கு ஒரு மாதம் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் நாடாளுமன்றில் இந்த 21வது திருத்தத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை, கிடைக்குமா? என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பொதுஜன பெரமுனவும் நிறைவேற்று ஜனாதிபதி முறை முற்றாக ஒழிக்கப்படவேண்டும் என்றும் அரசியல் அமைப்பு திருத்தங்கள், துண்டு துண்டாக நிறைவேற்றப்படக்கூடாது என்ற கருத்தை கொண்டிருப்பதே இதற்கான காரணமாகும்.
எனவே அதிக உறுப்பினர்களை கொண்டுள்ள பொதுஜன பெரமுனவின் ஆதரவு கிடைத்தால் மாத்திரமே, 21ஐ நடைமுறைப்படுத்தமுடியும் என்பது யதார்த்தமாகும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.