யாழிற்கு ஜனாதிபதி வந்திருந்த நிலையில் வேலன் சுவாமிக்கு ஏற்பட்ட துயர சம்பவம்! அதிருப்தியில் தமிழ் சமூகம் (Video)
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான உழவர் திருநாளான இன்று தமிழர் தாயகத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இன்று பதிவாகிய சம்பவங்கள் பல தமிழ் சமூகத்தின் கவனத்தை தம் பக்கம் திருப்பியுள்ளது.
பொலிஸாரின் கைகளை பிடித்து கதறிய தாய்மாரின் கண்ணீர், ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து குவிக்கப்பட்ட பெருமளவு படையினர் மற்றும் ஆர்ப்பாட்டங்களை ஒடுக்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட நீர்த்தாரை பிரயோகம் உள்ளிட்டவை இன்று பதிவான சில துன்பகரமான சம்பவங்களாகும்.
மதத்தலைவர் மீது நீர்த்தாரை பிரயோகம்
இதேவேளை மற்றொரு சம்பவமும் இன்று தமிழ் சமூகத்தை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.
அதாவது இன்றைய தினம் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் போராட்டத்தில் கலந்து கொண்ட சிவகுரு ஆதீனத்தின் முதல்வர் வேலன் சுவாமிகளுக்கும் மதத்தலைவர் என்ற மரியாதை வழங்கப்படாது அவர் மீது நீர்த்தாரை பிரயோகிக்கப்பட்ட சம்பவமே அது.
கடந்த காலங்கள் முதலே வடக்கு, கிழக்கு உள்ளிட்ட இடங்களில் மதத் தலைவர்கள் மீதான மரியாதையற்ற நடவடிக்கைகள் தொடர்ந்து வந்து கொண்டு தான் இருக்கின்றன.
குறிப்பாக போராட்டங்களின் போது மதத்தலைவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளுதல், மதத்தலைவர்கள் பலர் காணாமல் ஆக்கப்பட்டமை உள்ளிட்ட பல சம்பவங்கள் பதிவாகிக் கொண்டு தான் இருக்கின்றன.
இந்த நிலையில் தேசிய தைப்பொங்கல் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி வருகை தந்திருந்த நிலையில் நடத்தப்பட்ட இந்த சம்பவமானது விசனத்திற்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





