2.5 மில்லியன் டொலர் நிதி மோசடி விவகாரம்: ஹர்ஷ டி சில்வா வீட்டிற்கு வந்த இரகசிய அறிக்கை
நிதி அமைச்சுக்குச் சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடியாகப் பரிமாற்றப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பில், தமக்குத் தனிப்பட்ட முறையில் அனுப்பி வைக்கப்பட்ட இரகசிய அறிக்கையைத் தான் நிராகரித்துள்ளதாக நாடாளுமன்ற அரச நிதி பற்றிய குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
குறித்த அறிக்கை குழுவின் பரிசீலனைக்காக நாடாளுமன்ற உத்தியோகபூர்வ நடைமுறைகளின் ஊடாகவே முறைப்படி சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதில் தான் உறுதியாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரச நிதி பற்றிய குழுவின் கூட்டத்தில் இந்த விடயம் குறித்துக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இரகசிய அறிக்கை
அவர் மேலும் தெரிவிக்கையில்,
குறித்த நிதிப் பரிமாற்றம் தொடர்பான முழுமையான விபரங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய சகல ஆவணங்களையும் உள்ளடக்கிய அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்குமாறு நிதி அமைச்சின் செயலாளருக்கு எமது குழுவினால் ஏற்கனவே உத்தியோகபூர்வமாகப் பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த அறிக்கையைத் தயாரித்துச் சமர்ப்பிப்பதற்காக நிதி அமைச்சுக்கு நான்கு வார கால அவகாசமும் வழங்கப்பட்டிருந்தது. இதற்கமைய, அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்ட போதிலும், அது எனது 'தனிப்பட்ட பார்வைக்காக' மாத்திரம் எனக்குத் தனிப்பட்ட முறையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இத்தகைய ஒரு நடவடிக்கை முறையானது அல்ல என்பதுடன், இதனை எந்த காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த அறிக்கையானது எனது தனிப்பட்ட தேவைக்காகக் கோரப்படவில்லை, மாறாக அரச நிதி பற்றிய குழுவின் ஒட்டுமொத்தப் பரிசீலனைக்காகவே கோரப்பட்டிருந்தது.
திருப்பி அனுப்ப நடவடிக்கை
நான் மக்களின் பிரதிநிதி என்பதுடன், தற்போது நாடாளுமன்ற அரச நிதி பற்றிய குழுவின் தலைவராக மாத்திரமே தற்காலிகமாகப் பணியாற்றுகின்றேன்.
எனவே, இந்த அறிக்கை எமது குழுவினால் விரிவாக ஆராயப்பட்டு விவாதிக்கப்பட வேண்டியதொன்றே தவிர, எனது தனிப்பட்ட வாசிப்புக்கானது அல்ல. இதன் காரணமாக, எனக்குத் தனிப்பட்ட முறையில் வந்த அறிக்கையை ஏற்றுக்கொள்ள மறுத்து, அதனை நாடாளுமன்றச் செயலகத்தின் ஊடாகவே திருப்பி அனுப்புவதற்கு நான் நடவடிக்கை எடுத்துள்ளேன்.

பொது நிதி தொடர்பான விவகாரங்களை மேற்பார்வையிடுவதற்கான அரசியலமைப்பு ரீதியான பொறுப்பு நாடாளுமன்றக் குழுக்களுக்குக் காணப்படுகின்றது என்பதை இங்கு நான் வலியுறுத்த விரும்புகின்றேன்.
இந்த அறிக்கை முறைப்படி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, குழுவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் ஆய்வுக் காகக் கிடைக்கப் பெற வேண்டும் என்பதில் குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் ஏகமனதாக உடன்பட்டுள்ளனர்.
நிதி மோசடிக் குற்றச்சாட்டுகள்
இதன்படி, எட்டப்பட்டுள்ள தீர்மானத்துக்கு அமைய, அரச நிதி பற்றிய குழுவானது இன்று புதன்கிழமைக்குள் இந்த அறிக்கையை நாடாளுமன்றத்தின் ஊடாக உத்தியோகபூர்வமாகச் சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குக் கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அறிக்கை கிடைக்கப் பெற்றதும், குழுவின் உறுப்பினர்கள் அதன் உள்ளடக்கங்களை முழுமையாக ஆய்வு செய்த பின்னரே, அடுத்த கட்டக் கலந்துரையாடல்களுக்காக இந்த விடயம் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

நடைமுறையிலுள்ள நாடாளுமன்ற மரபுகள் மற்றும் விதிமுறைகளை மீறிச் செயற்பட முற்படும் இத்தகைய முயற்சிகள், பொது நிதி தொடர்பான பொறுப்புக்கூறல் மற்றும் ஜனநாயகக் கண்காணிப்பு செயல்முறைகளைக் பலவீனப்படுத்தும்.
குறிப்பாகப் பொது நிதி மற்றும் நிதி மோசடிக் குற்றச்சாட்டுகள் நிலவும் விவகாரங்களில் இத்தகைய தன்னிச்சையான போக்குகள் அனுமதிக்கப்பட மாட்டாது என்றார்.
ட்ரம்பின் அந்த முடிவு... நடுங்க வைக்கும் எச்சரிக்கை விடுத்துள்ள சீனாவின் நாஸ்ட்ராடாமஸ் News Lankasri
பிரபல துணை நடிகை தீபாவின் தந்தைக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! விரட்டி விரட்டி வெட்டிய கும்பல் Manithan
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் ஸ்டாலின்-நிரோஷா நடிக்கும் புதிய சீரியல்... வெளிவந்த புரொமோ Cineulagam