உலகில் 2.1 பில்லியன் மக்கள் குடிநீரின்றி தவிப்பு
உலகில் இன்னும் 2.1 பில்லியன் மக்கள் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதியின்றி தவிப்பதாக யுனெஸ்கோ அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
குறிப்பாக, கிராமப்புறங்களில் தண்ணீர் சேகரிக்கும் பொறுப்பில் 70 சதவீதத்திற்கும் அதிகமான பெண்கள் மற்றும் சிறுமிகளே ஈடுபடுகின்றனர்.
உலகளவில் பெண்கள் நாளொன்றுக்கு சுமார் 25 கோடி மணிநேரத்தை தண்ணீர் சேகரிப்பதற்கே செலவிடுகின்றனர். இதனால் அவர்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் ஓய்வு நேரம் பெருமளவில் பாதிக்கப்படுகிறது.
மட்டக்களப்பில் கிணற்றுக்குள் கேட்ட அலறல் சத்தம்.. உள்ளிருந்து மீட்கப்பட்ட பெண் வழங்கிய திடுக்கிடும் தகவல்
நீர் பற்றாக்குறை
நீர் பற்றாக்குறை மற்றும் மோசமான சுகாதார வசதிகள் பெண்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்குகின்றன.
போதிய கழிப்பறை வசதிகள் இல்லாததால், குறிப்பாக மாதவிடாய் காலங்களில் பாடசாலைக்கு செல்ல முடியாமல் சுமார் 1 கோடி வளரிளம் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது.

மேலும், தண்ணீர் தேடி நீண்ட தூரம் பயணிக்கும்போது பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் அதிகரிக்கின்றன.
நில உரிமை பெரும்பாலும் ஆண்களிடமே இருப்பதால், விவசாயம் மற்றும் இதரத் தேவைகளுக்கான நீரைப் பெறுவதிலும் பெண்களுக்குப் பெரும் சவால்கள் நீடிக்கின்றன.
நிதி வாய்ப்பு
காலநிலை மாற்றமும் இந்தப் பாலின இடைவெளியை மேலும் அதிகரிக்கிறது. வெப்பநிலை 1 டிகிரி செல்சியஸ் உயரும்போது, பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வருமானம் ஆண்களை விட 34 சதவீதம் அதிகமாகப் பாதிப்படைவதாகத் தரவுகள் கூறுகின்றன.
இருப்பினும், நீர் முகாமைத்துவம் மற்றும் கொள்கை முடிவெடுக்கும் இடங்களில் பெண்களின் பங்களிப்பு 20 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது.

இந்த நிலையை மாற்ற, நீர் முகாமைத்துவத்தில் பெண்களைத் தலைவர்களாக அங்கீகரிக்க வேண்டும் என்றும், அவர்களுக்குச் சமமான நில உரிமை மற்றும் நிதி வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்றும் யுனெஸ்கோ வலியுறுத்தியுள்ளது.
"பெண்களுக்கு சமமான நீர் உரிமை கிடைக்கும்போது, அது முழு சமூகத்திற்கும் பயனளிக்கும்" என்று யுனெஸ்கோ தலைமை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.