முல்லைத்தீவில் யானை தாக்கிய 19 வயது இளைஞர் உயிரிழப்பு
முல்லைத்தீவு - தேறாங்கண்டல் பகுதியில் வயல் காவலில் ஈடுபட்டிருந்த 19 வயது இளைஞன் ஒருவர், காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று(17.01.2026) 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர், தேறாங்கண்டல் பகுதியை சேர்ந்த பொன்முடி சுயந்தன் எனும் 19 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
உயிரிழப்பு
குறித்த இளைஞர், வழமை போல விவசாய நிலத்தை பாதுகாக்கும் நோக்கில் வயல் காவலில் ஈடுபட்டிருந்த வேளையில், திடீரென காட்டு யானை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலவிதமான கஷ்டங்களும், இயற்கை அனர்த்தங்களும் சூழ்ந்த நிலையில், விவசாயத்தை நம்பி வாழும் இந்தப் பகுதி மக்களிடையே, இந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை, காட்டு யானை அச்சுறுத்தலால் தொடர்ச்சியாக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதால், நிரந்தர தீர்வு ஒன்றை பெற்றுத்தர வேண்டும் என பிரதேச மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.