நைஜீரிய இராணுவப் பாடசாலை மீது பயங்கரவாத தாக்குதல்: 17 பயிற்சி பொலிஸார் உயிரிழப்பு
நைஜீரியாவின் வடகிழக்கு மாநிலமான யோபேயில் உள்ள சிறப்பு இராணுவப் பயிற்சிப் பாடசாலை ஒன்றின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 பொலிஸார் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர்.
நைஜீரியாவில் கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிரவாதம் நீடித்து வரும் நிலையில் இந்தத் தாக்குதல் அரங்கேறியுள்ளது.
யோபே மாநிலத்தின் புனி யாடி பகுதியில் அமைந்துள்ள நைஜீரிய இராணுவத்தின் சிறப்புப் படைப் பாடசாலை மீது, கடந்த வெள்ளிக்கிழமை(15.5.2026) அன்று பயங்கரவாதிகள் பல திசைகளில் இருந்தும் ஒருங்கிணைந்து இந்தத் தாக்குதலை நடத்தியதாக தேசிய பொலிஸ் செய்தித் தொடர்பாளர் அந்தோணி ஒகோன் பிளாசிட் தெரிவித்துள்ளார்.
உயிரிழப்பு
இந்தத் தாக்குதலில் பொலிஸாருடன் இணைந்து பல இராணுவ வீரர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.ஆனால் இராணுவத் தரப்பு உயிரிழப்புகளின் துல்லியமான எண்ணிக்கை இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
கடந்த 2009-ஆம் ஆண்டு 'போகோ ஹராம்' அமைப்பின் எழுச்சியுடன் தொடங்கிய இந்த வன்முறை, பின்னர் அந்த அமைப்பிலிருந்து பிரிந்து உருவான 'இஸ்லாமிக் ஸ்டேட் மேற்கு ஆப்பிரிக்க மாகாணம்' என்ற பயங்கரவாதக் குழுவால் தற்போது தீவிரமடைந்துள்ளது.

இச்சம்பவம் நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்புதான், லேக் சாட் படுகைப் பகுதியில் அமெரிக்க மற்றும் நைஜீரியப் படைகள் இணைந்து நடத்திய கூட்டு இராணுவ நடவடிக்கையில், ஐஎஸ்ஐஎஸ் (ISIS) அமைப்பின் உலகளாவிய இரண்டாம் கட்டத் தலைவனும், ISWAP குழுவின் மூத்த தளபதியுமான அபு-பிலால் அல்-மினுகி சுட்டுக்கொல்லப்பட்டதை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் நைஜீரிய ஜனாதிபதி போலா அகமது டினுபு ஆகியோர் உறுதிப்படுத்தியிருந்தனர்.
இந்தத் தலைவனின் மறைவுக்குப் பழிவாங்கவே பயங்கரவாதிகள் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.