திருட்டு பழி சுமத்திய 14 வயது சிறுவன் தூக்கிட்டு மரணம்! கொலையென கதறும் தாய்
மன்னார் - மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இலுப்பைக்கடவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கள்ளியடி பகுதியில் வசித்து வந்த வவுனியாவை சேர்ந்த 14 வயதுடைய சிறுவனொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதன்போது, நாகேந்திரன் டிலக்ஸன் (வயது-14) எனும் சிறுவனே நேற்று தூக்கிட்ட நிலையில் அவரது வீட்டின் சாமி அறையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கள்ளியடியில் உள்ள கிராம அலுவலகர் ஒருவரின் அரிசி ஆலை ஒன்றில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பான முரண்பாட்டின் காரணமாக குறித்த சிறுவன் தற்கொலை? செய்துள்ளதாக தெரிய வருகிறது.
கள்ளியடி பகுதியில் வசித்து வந்த வவுனியாவை சேர்ந்த சிறுவன் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை கள்ளியடி பகுதியில் அரிசி ஆலை ஒன்றுக்கு அரிசி திரிக்க சென்ற நிலையில் அங்கு பணம் திருடப்பட்டதாக அரிசி ஆலையின் உரிமையாளரின் மகன் சிறுவனின் நண்பரிடத்தில் கூறிய போது அவர் எடுத்திருந்தால் பணத்தை திருப்பி தருவதாக கூறியுள்ளனர்.
பின்னர் அரிசி ஆலையின் உரிமையாளரின் மகன் மற்றும் மகனின் நண்பர்கள் சிலர் இணைந்து குறித்த சிறுவனின் வீட்டிற்கு சென்று சிறுவனை தாக்கியதாகவும், சிறுவனின் தாய் தாக்க முயன்றவர்களின் காலில் விழுந்து கதறியதாகவும், சிறுவனை தொடர்ந்தும் தாக்கி விட்டு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் வீட்டில் மகனை நித்திரையாக்கி விட்டு தாயார் வெளியில் சென்று வீட்டுக்கு வந்தபோது சிறுவனை தாக்கியவர்கள் மறுபடியும் அவர்களது வீட்டில் இருந்து செல்வதை அவதானித்து தாயார் ஓடி வந்து பார்த்த போது மகன் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததாகவும் தாயார் தெரிவித்துள்ளார்.
இது தற்கொலை அல்ல எனவும், மகன் தற்கொலை செய்யுமளவுக்கு விபரம் தெரியாதவர் எனவும் தாய் தெரிவித்துள்ளார்.
குறித்த சிறுவனின் மரணம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில், மேலதிக விசாரணைகளை இலுப்பைகடவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.