13 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவு கூரல் : பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு
மே 18ஆம் திகதி மத்திய லண்டனில் ட்ரபால்கர் சதுக்கத்தில் மாலை 5:30 மணிக்கு தொடங்கும் 13ஆம் வருட முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவு கூரல் நிகழ்வுக்கு பிரித்தானிய தமிழர் பேரவையினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
“வெற்றிகளை மட்டுமே பார்க்க விரும்பியவர்கள் விடுதலையின் பாதையில் வரும் பின்னடைவுகளை கண்டு துவண்டு விடுவர். பின் தங்கிடுவர். பாதைகள் மாறி திசை மாறி சென்றிடுவர். தற்காலிக வெளிச்சங்களை நோக்கி அகன்றிடுவர்.
ஆனால் தாம் வரித்துக்கொண்ட இலட்சியத்திற்காக எந்த இடர் நேரினும் போற்றுவார் போற்றினாலும் தூற்றுவோர் தூற்றினாலும் இலக்கு மட்டுமே நோக்கிடும் அர்ச்சுனனாக வாழ்வியல் இச்சைகளுக்கு அப்பால் அயராது செயல்படும் மாமனிதர்கள்தான் கடும் சூறாவளியில் தாக்குப் பிடித்து வெற்றியின் கரைக்கு அழைத்து செல்லும் மீகாமான்களாவர்.
18 மே 2009இற்குப் பின் இருந்த நிலை சற்று எம் கண் முன் வரட்டும். அதிர்ச்சியும், அயர்ச்சியும், கோபமும், பயமும், அவலமும், அவமானமுமாக, மரணமும், சிறை வாழ்க்கையுமாக, சுற்றியிருந்த இடமெல்லாம் நெருப்பும் புகையுமாக, கருக்கப்பட்ட உடலங்களும் நொறுக்கப்பட்ட கட்டடங்களுமாக, தாயகத்தின் உள்ளேயும் வெளியேயும் துரத்தி துரத்தி வேட்டையாடப்பட்ட விலங்குகளாக இருந்த தமிழினம் தொலை தூரத்து வெளிச்சத்தை தேடியது. அந்த நிலையிலும் கூட போர்க் குணமும் விடுதலை வேட்கையும் நேர்மையும் உறுதியும் புத்தாக்க சக்தியும் ஒரு சிலரிடமாவது தங்கியிருந்தது.
ஒரு வழி தடுக்கப்பட்டால் புது வழி திறக்கும். அறிவும் ஆற்றலும் செயல் திறனும் உள்ளவர்கள் தளரா நம்பிக்கையுடன் ஒருங்கு திரண்டு எழுந்தது எம்மை ஒடுக்க நினைத்த எதிரிக்கு விழுந்த முதலடி. உலகின் முன்னே தமிழினத்தை பயங்கரவாதிகளாக பிரிவினைவாதிகளாக உருவகப்படுத்திய சிங்கள தேசம் இன்று கொடூர குற்றங்கள் புரிந்ததாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. மாறாக தமிழினம் பாதிக்கப்பட்டவர்களாக ஒடுக்கப்பட்டவர்களாக எது வரினும் அயராது எழுந்து நீதிக்காக போராடும் இனமாக மதிக்கப்படுகிறது.
எம் மக்களே!
எம் விடுதலை போராட்டம் குரூரமாக சிதைக்கப்பட்டு 13 வருடங்களின் பின்னர் உலக ஒழுங்கில் ஒரு முக்கிய அமைவிடத்தில் பாரம்பரிய தாயகத்தை கொண்டிருக்கும் ஈழத் தமிழராகிய நாம் புறம் தள்ளி விட முடியாத ஒரு சக்தியாக இன்று எழுந்து வருகின்றோம். மாறாக சிங்கள தேசம் தன் நாளாந்த அத்தியாவசிய தேவைகளைக் கூட உலக நாடுகளிடம் யாசித்துப் பெற வேண்டி உள்ளது.
இலங்கைத் தீவின் மக்கள் படும் அவலங்களை நாம் அனுதாபத்துடனேயே பார்க்கின்றோம். அடுத்தடுத்து வந்த அனைத்து ஆட்சியாளர்களும் தமிழ் மக்கள் மீது பெரும் போரினை கட்டமைத்து சிங்கள தேசம் எம்மை அழிவின் விளிம்பிற்கு தள்ளியது.
இதனை விட மோசமான பொருண்மிய தடைகள் எம் மீது ஏவி விடப்பட்டாலும் அதனை நேர்மையான திறமையான தலைமையுடன் வெற்றிகரமாக முறியடித்தோம். அனைத்து அதிகாரங்களையும் இறைமையுள்ள நாடு எனும் அங்கீகாரத்தையும் கொண்ட சிங்கள தேசம் செல்வழி தெரியாது தவிக்கின்றது.
மற்றுமொரு ஆட்சி மாற்றம் இலங்கைத் தீவின் பிரச்சினைகளை தீர்க்கப் போவதில்லை. தூர இருந்தே எம் மண்ணை அளவற்று நேசித்த புலம்பெயர் மக்களாகிய நாம் எடுத்த முன் முயற்சிகளும் உலக ஒழுங்கில் ஏற்பட்டு வரும் மாற்றங்களும் நீதிக்கும் உரிமைக்குமான எம் கோரிக்கைகளை இன்று முன் நோக்கித் தள்ளியுள்ளது.
சரியான நேரத்தில் சரியான வியூகங்களை வகுத்து நெறி முறையாக செயல்பட வேண்டிய நேரமிது. எதிரி நிலை குலைந்து சரிவை சந்திக்கும் இந்த நேரத்தில், கடந்த 70 ஆண்டுகளில் இலங்கை அனுபவிக்காத பெரும் பின்னடைவுகளை எதிர்கொள்ளும் வேளையில், எம் கரங்களை உறுதியாகப் பிணைத்து சாதுரியமாக நீதிக்கான பயணத்தை இன்னும் வேகமாக முன் நகர்த்தும் வேளை இது.
உலகத் தமிழ் மக்களே! ஒன்றுபடுவோம்! செயல்படுவோம்!
எதிர்வரும் மே 18ஆம் திகதி மத்திய லண்டனில் ட்ரபால்கர் சதுக்கத்தில் மாலை 5:30 மணிக்கு தொடங்கும் 13ஆம் வருட முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவு கூரல் நிகழ்வில் அனைவரும் ஒன்று திரண்டு இழந்த எம் மக்களுக்காக அஞ்சலி செலுத்துவதுடன் நீதிக்கான பயணத்தில் நம்பிக்கையுடன் செயல்படுவோமென உறுதி எடுப்போம்.
இந்த நிகழ்வில் “Continuing Cycles of Violence and Genocide in Sri Lanka" ஆவண திரைப்படம் உலகெங்கிலும் பார்க்கக் கூடியதாக வெளியிட்டு வைக்கப்படும்.
பூகோள ஒழுங்கு மாற்றங்களும் தமிழ் மக்கள் மீதான தாக்கங்களும் குறித்த கண்காட்சி ஒன்று இளையோர்களின் முன்னெடுப்பில் வருகை தருவோரின் பார்வைக்கு வைக்கப்படும். பிரித்தானிய மற்றும் உலக நாடுகளின் முக்கிய பிரமுகர்கள் உரையாற்ற உள்ளனர். முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்படும்.
சரியாக மாலை 6 மணி 18 நிமிடத்தில் (மே 18 18:18) அணைத்து மக்களும் இணைந்து ஒளி ஏற்றப்படும்.
ஒன்றுபடுவோம்! ஒடுக்கப்பட்ட எம் மக்களுக்காக உறுதி எடுப்போம்! நீதிக்கான பயணத்தை விரைவுபடுத்துவோம்!”
இடம் : Trafalgar Square, London WC2N 5DN,
திகதி : 18 May 2022, Wednesday
நேரம்: 5:30 PM
பிரித்தானிய தமிழர் பேரவை