அவுஸ்திரேலியா வேலைவாய்ப்பு ஆசையை காட்டி பெருந்தொகை பணமோசடி!
அவுஸ்திரேலியாவில் வேலை வாங்கித்தருவதாக கூறி ஏமாற்றப்பட்ட இரண்டு இளைஞர்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் சிறப்பு புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கண்டியில் விசா ஆலோசனை மையம் நடத்துவதாகக் கூறி அவுஸ்திரேலியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி அவர்கள் பணத்தை மோசடி செய்ததாக பணியகம் தெரிவித்துள்ளது.
நிறுவனத்தில் சோதனை
கம்பஹா பகுதியில் வசிக்கும் ஒருவரிடமிருந்து சந்தேகநபர்கள் ரூ. 3.5 மில்லியன் பணத்தைப் பெற்றுக்கொண்டு, வாக்குறுதியளித்தபடி வேலை வழங்கவில்லை என்று பணியகத்திற்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

அதன்படி, விசாரணையைத் தொடங்கிய வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசாரணை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட நிறுவனத்தை சோதனை செய்துள்ளனர்.
மேலும் அந்த நிறுவனம் பணியகத்தின் செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் விசா ஆலோசனை மையத்தை நடத்தி வந்தமையும் தெரியவந்தது.
இந்த மோசடி நிறுவனத்தை நடத்தி வந்த கம்பளை மற்றும் தலத்துஓயாவைச் சேர்ந்த 23 வயதுடைய இரண்டு இளைஞர்கள் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.