மாந்தை மேற்கு பகுதியில் காட்டு யானை தாக்கி இளைஞர் காயம்
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பருப்புக் கடந்தான் பகுதியில் காட்டு யானை தாக்கிய நிலையில் சிறு காயங்களுடன் இளைஞர் ஒருவர் உயிர் தப்பியுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மடுக்கரை கிராமத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவரே காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளார்.
குறித்த இளைஞர் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பெரிய மடு பகுதியில் உள்ள தனது தோட்டத்தைப் பார்வையிட்டு பின் மீண்டும் வீடு நோக்கி மோட்டார்சைக்கிளில் சென்றுள்ளார்.
இதன்போது குறித்த இளைஞர் பருப்புக்கடந்தான் கட்டுக்கரை குள வீதியூடாக மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த போது வீதியில் மறைந்திருந்த காட்டு யானை அவரை தாக்கியுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில் இளைஞர் மோட்டார்சைக்கிளில் இருந்து பாய்ந்துள்ளார். அதனால் மோட்டார்சைக்கிளை யானை சேதப்படுத்தியுள்ளது.
இதனை தொடர்ந்து அயலவர்களின் உதவியுடன் காயங்களுக்கு இலக்கான நிலையில் குறித்த இளைஞர் மீட்கப்பட்டு பள்ளமடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.