சினோபார்ம் தடுப்பூசியை தவிர்த்து வரும் இளைஞர்கள்! - வெளியாகியுள்ள தகவல்
ஃபைசர் மற்றும் மொடர்னாவை, பெரும்பாலான இளைஞர்கள் கோருவதால், சினோபார்ம் தடுப்பூசியை பெறுவதை தவிர்த்து வருவதாக மருத்துவர்களை கோடிட்டு கொழும்பின் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சினோபார்ம் மீதான மேற்கத்திய நாடுகளின் அணுகுமுறையும் இதற்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது. இலங்கையில் நாளாந்தம் இளைஞர்களிடையே 2 முதல் 3 இறப்புகள் பதிவாகின்றன.
இலங்கையில் 20 முதல் 29 வயதுக்குட்பட்டவர்களில் 40 வீதம் பேர் மட்டுமே, இதுவரை தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது இலங்கையில் பொதுமக்கள் அனைவருக்கும் வைரஸுக்கு எதிராக தடுப்பூசி வழங்கப்படும் நேரத்தில் மிகவும் மோசமான சதவீதமாகும். புள்ளிவிவரங்களின்படி, ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 95 சதவிகிதம் தடுப்பூசி பெறாதவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
எனவே பொதுமக்கள் தங்கள் விருப்பங்களை ஒதுக்கி வைத்து, கிடைக்கக்கூடிய தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
சில ஆண்டுகளில் மேற்கத்திய நாடுகளுக்கு பயணம் செய்ய காத்திருக்கும், கொழும்பு இளைஞர்கள் மத்தியில் கூட ஆர்வம் இல்லாததால் பல பகுதிகளில் தடுப்பூசி மையங்கள் வெற்றிச்சோடி வருவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.