எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக தற்கொலைக்கு முயற்சித்த இளைஞர் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு (PHOTOS)
முல்லைத்தீவு - முள்ளியவளை தண்ணீரூற்று பகுதியில் அமைந்துள்ள லங்கா ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தற்கொலைக்கு முயற்சித்த இளைஞரை 09.06.2022 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு - முள்ளியவளை தண்ணீரூற்று பகுதியில் அமைந்துள்ள லங்கா ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடந்த 30ம் திகதி போத்தல்களில் டீசல் வழங்கப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய அங்கு சென்று இளைஞர்கள் தங்களுக்கும் விவசாய நடவடிக்கைக்கு எரிபொருள் வழங்குமாறு கேட்டுள்ளதுடன் எரிபொருள் நிரப்பப்படுவதை காணொளியும் எடுத்துள்ளனர்.
ஊழியர்களுக்கும் இளைஞர்களுக்குமிடையில் முறுகல்
இதன்போது எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நின்ற ஊழியர்களுக்கும் இளைஞர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள லங்கா IOC எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அவர்களுக்கு பிடித்தவர்களுக்கு டீசல் போத்தல்களில் வழங்கப்பட்டு வருவதாக பலரும் குற்றம்சாட்டிய நிலையில் இந்த சம்பவம் அங்கு பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் போத்தல்களில் எரிபொருட்கள் வழங்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும் சிலருக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், ஏன் பொது மக்களுக்கு டீசல் வழங்கவில்லை என கோரி இளைஞன் ஒருவர் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்னால் பெட்ரோலினை ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்துள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து முள்ளியவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சம்பவ இடத்திற்கு சென்று தற்கொலைக்கு முயற்சித்த இளைஞனை காப்பாற்றுவதற்காக கட்டிப்பிடித்த போது பொலிஸ் அதிகாரி மீதும் பெட்ரோலினை ஊற்றிய இளைஞன் கையில் உள்ள லைட்டரை பற்றவைக்க முயற்சித்துள்ளார்.பொலிஸ் அதிகாரியால் மடக்கிபிடிக்கப்பட்ட இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
இந்நிலையில் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் முறைகேடுகள் இருப்பின் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யலாம் என்றும் லங்கா IOC நிறுவனத்தின் ஊழியர்கள் அவர்களின் மேல் அதிகாரிகளின் வார்த்தையை கேட்டே செயற்படுவதாகவும் மக்கள் இது தொடர்பில் முறையிடலாம் என்றும் முள்ளியவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு இடையூறு விளைவித்தமை, தற்கொலைக்கு முயற்சித்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட இளைஞன் 31.05.2022 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது அவரை எதிர்வரும் 09.06.2022 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளதுடன், குறித்த நபரை மனநோய் மருத்துவரிடம் காட்டி அவரை பரிசோதனை செய்யுமாறும் மன்று பணித்துள்ளது.