கிளிநொச்சியில் எரிவாயுவுக்காக காத்திருந்த மக்கள் வீதியை மறித்து போராட்டம் (Photos)
கிளிநொச்சியில் சமையல் எரிவாயு கொள்கலன்களை பெற்றுக்கொள்வதற்கு அதிகாலை முதல் காத்திருந்த மக்கள் ஏ9 வீதியை மறித்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையைத் தொடர்ந்து எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு கொள்கலன் என்பவற்றைப் பெற்றுக் கொள்வதற்கு மக்கள் தினமும் நீண்ட வரிசைகளில் காத்திருந்து வருகின்றனர்.
நெடுநேரம் காத்திருந்த மக்கள்
இந்நிலையில் இன்றையதினம் கிளிநொச்சிக்குச் சமையல் எரிவாயு கொள்கலன்கள் வந்துள்ள நிலையில், அவற்றை பெற்றுக் கொள்வதற்காக இன்று அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்த போதும் சமையல் எரிவாயு கொள்கலன் வழங்கப்படவில்லை.
இதனை தொடர்ந்து நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள் எரிவாயு கொள்கலன்களை ஏ-9 வீதியின் குறுக்காக வைத்து வீதியை மறித்து போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார்
இதையடுத்து சம்பவ இடத்துக்குக் கிளிநொச்சி பொலிஸார் விரைந்து நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
எரிவாயு கொள்கலன் விநியோகத்தர்களுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையின் அடிப்படையில் டோக்கன் வழங்கப்பட்டு எரிவாயு கொள்கலன் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதனை அடுத்து குறித்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.