வவுனியாவில் குற்றச்செயலில் ஈடுபட்ட இளைஞரொருவர் கைது
வவுனியாவில் வீடு உடைத்து திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா, இலுப்பையடி பகுதியில் வைத்து குறித்த இளைஞன் இன்று (24) கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா, இரண்டாம் குறுக்குதெரு பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை வீடு ஒன்று உடைக்கப்பட்டு அங்கிருந்த 3 பவுண் நகை மற்றும் 30 ஆயிரம் ரூபாய் பணம் என்பன திருடப்பட்டிருந்தன.
இது தொடர்பில் வெள்ளிக்கிழமை வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸில் வீட்டு உரிமையாளரால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ.பீ.மானாவடுவின் (B.P. Manavadu) வழிகாட்டலில், குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சதுரங்க (Sadhuranga) தலைமையில் பொலிஸ் சார்ஜன்ட்டுகளான திஸாநாயக்க (Dissanayake), திலீப் (Dileep) மற்றும் பொலிஸ் கொன்டபிள்களான உபாலி (Upali), சமீர (Sameera), தயாளன் (Dhayalan), திஸாநாயக்கா விக்கிரமசூரிய (Dissanayake Wickramasuriya) தலைமையிலான பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இதனடிப்படையில் குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா, இலுப்பையடிப் பகுதியில் வைத்து தரணிக்குளம் பகுதியைச் சேர்ந்த 28 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் திருடப்பட்ட நகைகள் அடகு கடை ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும், சந்தேகநபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.